ஜப்பானின் திடீர் கைது நடவடிக்கையால் சீனாவுடன் மீண்டும் இறுகும் நெருக்கடி
சீன மீன்பிடிக் கப்பல் ஒன்றை ஜப்பான் அதிகாரிகள் கைப்பற்றியதுடன், அதன் மாலுமியை கைது செய்துள்ள விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உத்தரவை மீறியதாக
ஜப்பானின் பிரத்தியேக கடல்சார் பொருளாதார மண்டலத்தில் மீன்வள அதிகாரிகளின் ஆய்வுக்காக நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியதாகக் கூறியே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் தென் கொரியா மற்றும் தைவானில் இருந்து மீன்பிடி படகுகளை ஜப்பான் கைப்பற்றியுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீன கப்பல் தொடர்பான முதல் சம்பவம் இதுவென்றே கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான இராஜதந்திர தகராறைத் தொடர்ந்து, ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்களை இது தூண்டக்கூடும்.
கியோடோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஜப்பானின் தென்மேற்கு நாகசாகி மாகாணத்திற்கு அப்பால் உள்ள நீரில் வியாழக்கிழமை கப்பல் ஒன்று பரிசோதனையைத் தவிர்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, கப்பலின் மாலுமி, 47 வயதான சீன நாட்டவர் கைது செய்யப்பட்டதாக ஜப்பானின் மீன்வள நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய கைது நடவடிக்கையின் போது அந்த மீன்பிடிக் கப்பலில் மேலும் 10 பேர்கள் இருந்துள்ளதாகவும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய கப்பலானது கானாங்கெளுத்தி மற்றும் குதிரை கானாங்கெளுத்தி போன்ற அதிக அளவிலான மீன்களைப் பிடிக்கும் திறன் கொண்டது என்றே ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மீன்பிடித்தலை மேற்கொள்வதற்காக அந்த கப்பல் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) நுழைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பு சந்தேகிக்கிறது.
ஆனால், கைதாகியுள்ள அந்த மாலுமி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டாரா என்பதை அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை, அது விசாரணையை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கோபம் கொள்ள
சீனாவுக்கு ஜப்பானுடன் பல பிராந்திய மோதல்கள் உள்ளன, மேலும் சீனாவில் டயோயு தீவுகள் என்று அழைக்கப்படும் ஜப்பானின் சென்காகு தீவுகளைச் சுற்றி தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில், ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா கூறுகையில், வெளிநாட்டுக் கப்பல்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் முறியடிக்கவும் நமது அமலாக்க நடவடிக்கைகளில் ஜப்பான் தொடர்ந்து உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றார்.
முன்னதாக தைவான் விவகாரத்தில் ஜப்பானின் நிலைப்பாடு சீனா நிர்வாகத்தை மொத்தமாக கோபம் கொள்ள வைத்தது. அத்துடன், ஜப்பானுக்கு பயணப்படுவதற்கு எதிராக தங்கள் குடிமக்களை சீனா எச்சரித்தது.

மேலும் கிழக்கு சீனக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ரஷ்யாவுடன் கூட்டு விமானப் பயிற்சிகளை நடத்தி ஜப்பானை சீண்டியது.
மட்டுமின்றி, இராணுவ பயன்பாட்டிற்கு சாத்தியமான பொருட்களுக்கான ஜப்பானுக்கான ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளையும் சீனா கடுமையாக்கியது மற்றும் ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |