ஜப்பான் ஆயுத ஏற்றுமதி விதிகளில் மாற்றம்: போர் கப்பல்கள், ஏவுகணைகள் விற்பனைக்கு அனுமதி
ஜப்பான் அரசு தனது பாதுகாப்பு ஏற்றுமதி விதிகளில் பல தசாப்தங்களுக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதன் மூலம் போர் கப்பல்கள், ஏவுகணைகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதி கிடைக்கிறது.
ஜப்பானின் பாதுகாப்பு தொழில்துறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஜப்பான், மீட்பு, போக்குவரத்து, எச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் உபகரணங்கள் போன்ற சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கே ஏற்றுமதி அனுமதி அளித்தது.

ஆனால் புதிய விதிமுறைகள் அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி, ஒவ்வொரு விற்பனைக்கும் தனித்தனியாக மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்துகின்றன.
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, “ஒரு நாடு தனியாக தனது அமைதியையும் பாதுகாப்பையும் காக்க முடியாது. பாதுகாப்பு உபகரணங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவு தரும் கூட்டாளிகள் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
போலந்து முதல் பிலிப்பைன்ஸ் வரை பல நாடுகள் ஜப்பானின் ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர், ஜப்பானின் மாற்றம் தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் பிராந்திய நிலைத்தன்மைக்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு போர்களால் சிரமப்படுகின்ற நிலையில், ஜப்பானின் புதிய ஏற்றுமதி வாய்ப்பு உலக சந்தையில் முக்கிய பங்காற்றும்.
இதேசமயம், ஜப்பான் தனது சொந்த இராணுவத்தையும் வலுப்படுத்தி வருகிறது. ஏவுகணைகள், ஸ்டெல்த் விமானங்கள், ட்ரோன்கள் போன்றவற்றை வாங்கி, சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த மாற்றம், ஜப்பானின் பாதுகாப்பு செலவுகளை மேலும் அதிகரிக்கும் என்றும், அதன் தொழில்துறை திறனை உலகளவில் விரிவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |