இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான வாய்ப்பை நிராகரித்த இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே! காரணம் இதுதான்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனேவிடம் பிசிசிஐ ஆலோசனை நடத்தியதும் அதை அவர் நிராகரித்ததும் தெரியவந்துள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனைத்தொடர்ந்து மேலும் அவர் இந்திய அணியுடன் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டதால் பிசிசிஐ அடுத்த பயிற்சியாளருக்கான தேடலை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர்களான லட்சுமணன் மற்றும் கும்ப்ளே ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் முன்னதாக இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்த்தினேவிடம் பிசிசிஐ பயிற்சியாளர் பதவிகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
ஆனால் ஜெயவர்த்தினே பிசிசிஐ-யின் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்றும் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் தற்போது தனக்கு இருக்கும் பணிகள் சரியாக உள்ளதாகவும், தான் இலங்கை அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மட்டுமே செயல்பட விருப்பப்படுவதாகவும் ஜெயவர்தனே கூறியிருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை அவர் நிராகரித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 11814 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 12650 ரன்கள் என சர்வதேச கிரிக்கெட்டில் பலத்த அனுபவம் வாய்ந்தவராக திகழ்கிறார் ஜெயவர்தனே.
ஐபிஎல் தொடரில் மும்பை அணி பயிற்சியாளராக ஜெயவர்தனே உள்ள நிலையில் அவர் பயிற்சியின் தலைமையில் மும்பை அணி 5 கோப்பைகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.