ஈரான் திருமண விழாவில் குண்டு வீச்சு... கண்டுகொள்ளத் தேவையில்லை என ஜேடி வேன்ஸ்
JD Vance reacts to airstrike at Iran wedding: ஈரான் திருமண விழாவில் வான்வழித் தாக்குதல் குறித்து ஜேடி வேன்ஸ் கருத்து.
தெற்கு ஈரானில் திருமண விழா ஒன்றில், நால்வர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கத் தாக்குதல்தான் காரணமா என்ற கேள்விக்கு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ், சில நேரங்களில் இதுபோன்ற விடயங்கள் நடப்பதுண்டு என்று பதிலளித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் அமைந்துள்ள சிரிக் மாவட்டத்தின் குஹெஸ்டாக் என்ற நகரிலேயே அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தியுள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கையை ஈரான் அரசாங்கம் அறிவிக்கவில்லை, மாறாக ஈரான் செஞ்சிலுவை சங்கமே அறிவித்தது.
இந்த அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் ஓர் உறுப்பினர் அமைப்பாகும். இது ஈரானிடமிருந்து சுதந்திரமாகச் செயல்படுவதுடன், உயிரிழப்பு புள்ளிவிவரங்கள் குறித்த நம்பகமான ஆதாரமாக சர்வதேச கண்காணிப்பாளர்களால் பொதுவாகக் கருதப்படுகிறது.
வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், இத்தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா பொறுப்பா என்று கேட்கப்பட்டபோது, வேன்ஸ் அந்தச் செய்திகளை நிராகரித்துள்ளார்.
மேலும், ஈரானிய அரசு ஊடகங்கள், போரில் இதுவரை நடந்தவற்றைச் சரியாகப் பதிவு செய்யவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அவர், எனவே இச்சம்பவம் குறித்து தனக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது என்றும் பதிலளித்துள்ளார்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான அமைப்பால் இந்தக் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டதற்கான எந்த ஒப்புதலையும் அவர் அளிக்கவில்லை.

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைப் (IRGC) போலல்லாமல், அமெரிக்கா ஒருபோதும் போரில் பொதுமக்களைக் குறிவைப்பதில்லை என்பதை என்னால் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் வேன்ஸ் பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா ஒருபோதும் பொதுமக்களை குறிவைக்காது, அமெரிக்கா பொதுமக்களை குறிவைத்ததில்லை, துரதிர்ஷ்டவசமாக, வெளிப்படையாகவே, சில சமயங்களில் சில விடயங்கள் நடந்துவிடும் என்றார்.

குறிப்பிட்ட அந்தத் தாக்குதல் குறித்து தன்னிடம் புதிய தகவல் எதுவும் இல்லை என்றும், ஆனால் அமெரிக்கா இது குறித்து விசாரித்து வருவதாகவும், ஈரானைப் போலல்லாமல் தனது தவறுகளிலிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளும் என்றும் வேன்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், 18 அமெரிக்க வீரர்களின் உயிர்ப்பலி வாங்கிய இந்த 7 மாதக் காலப் போரை வெறும் மோதல் என்றே வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் விமர்சகர்களிடமிருந்து உடனடி கடும் எதிர்ப்பைத் தூண்டியது.
இதனிடையே, அமெரிக்காவிடம் ஆயுதப் பற்றாக்குறை என செய்திகள் வெளியிட்டுள்ள செய்தியாளர்களைக் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவிடம் தேவைக்கும் அதிகமான ஆயுதங்கள் இருப்பு உள்ளது என்றும், அவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்கும் இழிபிறவிகள் என்றும் குறிப்பிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |