லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கண்ணாடி விரிசல்! உயிர் தப்பிய 200 பயணிகள்
பிரித்தானியாவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, முன்பக்க கண்ணாடி திடீரென்று உடைந்து விரிசல் ஏற்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த 200 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று 200 பயணிகளுடன் கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று புறப்பட்டுள்ளது.
விமானம் சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்திற்கு மேலே சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானத்தில் இருந்து பனிக்கட்டி குவியல் ஒன்று, இந்த விமானத்தின் முன்புற கண்ணாடியில் விழுந்தது.
இதனால் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் பின் விமானி சாதூர்யமாக செயல்பட்டு, விமானத்தை சான் ஜோஸ் நகரில் பத்திரமாக தரையிரக்கியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானம் தரையிரங்கியவுடன் பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானநிலையத்தின் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர்.