நீக்க தயார்... ஈரான் தொடர்பில் ஜோ பைடன் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நிர்வாகம் வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. குறித்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன.
முழுமையான கூட்டு செயல்திட்டம் என்றழைக்கப்படுகிற இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிடவும், யுரேனியம் கையிருப்பை 15 ஆண்டுகளில் குறைக்கவும், அதற்கு பதிலாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை திரும்பப்பெறவும் வழிவகை செய்துள்ளது.
ஜனாதிபதி ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அவருக்கு பின்னர் வந்த டிரம்ப் நிர்வாகம் விலகியது. இப்போது அமெரிக்காவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோ பைடன் ஜனாதிபதியாகி இருக்கிறார்.
இந்த நிலையில், அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.