அதிபராக பதவியேற்கும் முதல் நாளிலேயே மிகப் பெரிய மசோதாவை அறிவிக்கவுள்ள ஜோ பைடன்!
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், அதிபராகப் பதவி பிரமாணம் செய்த முதல் நாளிலேயே ஒரு பாரிய குடியேற்ற மசோதாவை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இதனையடுத்து வரும் ஜனவரி 20-ஆம் திகதி ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் ஏற்கிறார்.
அதே நாளில் அவர் பல முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறியவர்களுக்கு குடியுரிமைக்கான எட்டு ஆண்டு பாதையை வழங்கும் புதிய மசோதாவை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு அப்படியே அதிபர் ட்ரும்பின் கொள்கைகளுக்கு நேரெதிரானது என்று கூறப்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ், ஜனவரி 1, 2021 வரை, சட்டபூர்வமான நிலை இல்லாமல் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு தற்காலிக சட்ட நிலைக்கு ஐந்தாண்டு பாதை அல்லது க்ரீன் கார்டு கொடுக்கப்படும்.
குடியுரிமையைத் தொடர முடிவு செய்பவர்கள், அவர்களுக்கான பின்புல ஆய்வுகளைக் கடந்தால், வரி செலுத்தி, பிற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தால் போதும், க்ரீன் கார்டு கொடுக்கப்படும்.
சில குடியேறியவர்களுக்கு, செயல்முறை விரைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ட்ரீமர்ஸ் என்று அழைக்கப்படும், சட்டவிரோதமாக குழந்தைகளாக அமெரிக்காவிற்கு வந்த இளைஞர்கள், அதேபோல் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்துள்ளவர்கள், அவர்கள் வேலை செய்துவந்தாலோ, பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலோ அல்லது பிற தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதும், அவர்கள் கிரீன் கார்டுகளுக்கு உடனடியாக தகுதி பெறலாம்.