பஞ்சம், பட்டினி.. பணத்திற்காக நடுரோட்டில் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விற்கும் மக்கள்! வெளிச்சத்திற்கு வந்த பகீர் தகவல்
காபூலில் ஏற்பட்ட பஞ்சத்தால் அங்கு வசிக்கும் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் எப்போது தாலிபான்கள் கால் எடுத்து வைத்தார்களோ அன்றில் இருந்து அங்கு வசிக்கும் மக்களுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது. தீவிரவாதிகள் நாட்டை கைப்பற்றிய பிறகு பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் உதவி செய்து கொண்டிருந்த உலக நாடுகளும் கடந்த மாதம் 15ஆம் திகதியுடன் நிதி உதவிகளை நிறுத்திவிட்டதால் காபூலில் வாழும் மக்கள் பசி, பட்டினியோடு வறுமையில் வாடுகின்றனர்.
அவர்களால் பசியில் அழுகின்ற குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலையில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி கூட தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தாலிபான்களுக்கு அஞ்சி அப்பகுதியில் வங்கிகள் மூடப்பட்டு இருப்பதால் மக்கள் தங்களது சேமித்த பணத்தை எடுக்க முடியவில்லை. காபூலில் உள்ள பெரிய நிறுவனங்களும் வெளியேறுவதால் மக்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
இதனால் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை வீதிக்கு கொண்டு வந்து விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காபூலில் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி வரும் ஃபிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பல உயர்ந்த பொருட்களை வீதிக்கு கொண்டு வந்து மலிவான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
குழந்தைகள் பசியில் தவிக்காமல் கையில் கிடைத்ததை வைத்து சாப்பாடு வழங்கலாம் என்ற எண்ணத்தில் இதனை மக்கள் கையில் எடுத்துள்ளனர். ஆப்கான் மக்கள் தங்களது சொத்துக்களை விற்று தாலிபான் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இதையடுத்து மக்கள் கொத்து கொத்தாக ஆப்கானில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.