விருதுகளில் மக்கள் பிரதிநிதித்துவம்– ஞானபீடம் உலகில் இரண்டாம் பெரு விருது- கல்லாறு சதீஷ்
கவிப்பேரரசு என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள், வைரமுத்து அவர்களுக்கு பட்டம் சூட்டிய அந்தக் கணத்தில், நான் பல விஷயங்களை நினைத்துப் பார்த்ததுண்டு.
இந்தப் பெருஞ்ஞான மகனாகிய கவி–பேரரசை ஒருநாள் அவர்தம் மொழிக்காக அரசுகளே தேடிவரும் என்று கற்பனை செய்தேன்.
அது இன்று என் கண்முன்னே நிஜமானது; இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. முதலமைச்சர், பிற மாநில துணை முதலமைச்சர்,அமைச்சர்கள், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், கல்விப் பெருந்தகைகள் எனப் பலர் நேரில் வந்து, தொலைபேசியில், சமூக ஊடகங்களில் வாழ்த்தியபோது, “பேரரசு” என்ற அந்தப் பட்டம் ஒரு உவமை அல்ல; அது ஒரு உண்மை என்று உணர்ந்தேன்.
நான் சென்னையில் இருந்தபோது, ஞானபீட அறிவிப்பு வெளியானது. அந்தச் செய்தி ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல; அது ஒரு மொழியின் பெருமை.

அவர் இல்லத்திற்குச் சென்றேன். மலர்க்கொத்துடன் வாழ்த்தினேன். பொன்னாடைக்குப் பதிலாக, எழுதும் கவிப்பேரரசின் வலது கரத்தை எடுத்து முத்தமிட்டேன்.
அந்த ஒற்றை முத்தம் ஒரு மனிதருக்கான அன்பு மட்டுமல்ல; அது எமது மொழிக்கும் பண்பாட்டிற்கும் நான் செலுத்திய மரியாதை.
என் தமிழை, என் மொழியை, என் உயிரை இந்த உலகின் உச்சியில் ஏற்றிய என் ஆசானை நான் பெருமையோடு நோக்கிய கணங்கள் அவை. அந்த அனுபவத்திலிருந்து நான் சிந்திக்கத் தொடங்கிய ஒன்று ,விருதுகளின் உண்மையான மதிப்பு என்ன? நாம் அதை எவ்வாறு அளவிடுகிறோம்? இதற்கான என் பதில்: “மக்கள் பிரதிநிதித்துவம்”.
ஒரு விருது எத்தனை பேருக்கு வழங்கப்படுகிறது என்பதை கணக்கிடுவது ஒரு எளிய கணிதம். ஆனால் அந்தக் கணிதத்தின் பின்னால் ஒரு பெரிய சமூக உண்மை உள்ளது.
இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் வருடத்திற்கு ஒரே ஒருவருக்கே வழங்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 143 கோடி. அதாவது, 143 கோடி மக்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பது. இந்த அளவில் பார்த்தால், அது ஒரு அரிதான தேர்வு மட்டுமல்ல;
அது மக்களின் மொத்த படைப்பாற்றலை ஒரு மனிதரின் வழியாக அடையாளப்படுத்தும் செயல்.சிபார்சுகளால் அன்றி ஒரு மனிதனின் ஞானத்தால் அளவிடப்படும் விருது ஞானபீடம்.

உலகளாவிய புகழ்பெற்ற நோபல் பரிசு வருடத்திற்கு சுமார் 6 முதல் 12 பேருக்கு வழங்கப்படுகிறது. உலக மக்கள் தொகை சுமார் 800 கோடி என எடுத்துக் கொண்டால், சுமார் 70 முதல் 130 கோடி மக்களுக்கு ஒரு விருது என்ற அளவு கிடைக்கிறது. அது மிகப் பெரிய அங்கீகாரம் தான்; ஆனால் அதன் வழங்கல் பல துறைகளில் பகிரப்பட்டிருக்கிறது.
திரைப்படத் துறையின் உயரிய விருதான ஆஸ்கார் வருடத்திற்கு பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது. பொதுவாக 50 முதல் 100 பேர் வரை விருது பெறுகின்றனர். இதனால் சுமார் 8 முதல் 16 கோடி மக்களுக்கு ஒரு விருது என்ற அளவு கிடைக்கிறது.
அதாவது, பரவலான அங்கீகாரம். உலகளாவிய இலக்கிய விருதான Booker Prize வருடத்திற்கு ஒரே எழுத்தாளருக்கே வழங்கப்படுகிறது. உலக மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால், சுமார் 800 கோடி மக்களுக்கு ஒரு விருது என்ற அளவிற்கு அது அரிதானதாகிறது. இதுவே அதன் தனித்துவம்.
அமெரிக்காவின் முக்கிய விருதான Pulitzer Prize வருடத்திற்கு சுமார் 20 பேருக்கு வழங்கப்படுகிறது. உலகளவில் பார்த்தால், சுமார் 40 கோடி மக்களுக்கு ஒரு விருது என்ற விகிதம் உருவாகிறது.
இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான Bharat Ratna அதிகபட்சம் 3 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது,இதனால் சுமார் 47 கோடி மக்களுக்கு ஒரு விருது என்ற அளவிற்கு அது அமைகிறது.
பிரான்சின் Legion of Honour, இங்கிலாந்தின் Order of the British Empire போன்ற விருதுகள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவை மிகப் பெரிய மரியாதை கொண்டவையாக இருந்தாலும், மக்கள் விகிதத்தின் அடிப்படையில் பரவலான அங்கீகாரங்களாக இருக்கின்றன,மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஞானபீடத்தை எட்டவில்லை.
இந்த எல்லா புள்ளிவிபரங்களும் என்ன சொல்லுகின்றன? ஒரு விருது குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் போது, அது அதிகமான மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
அதிகமான மக்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பதே உண்மையான ஜனநாயகத் தேர்வு என நான் நம்புகிறேன். இந்தக் கோணத்தில் பார்த்தால், ஞானபீடம் ஒரு அரிய உச்சம். வைரமுத்து அந்த உச்சத்தை எட்டியவர்.
அந்த நிலையிலிருந்து பார்க்கும்போது, நோபல் பரிசும், ஆஸ்காரும் வேறு துறைகளின் பாதைகள். ஆனால் இலக்கியத்தின் பாதையில், உலகளவில் ஒரே ஒருவருக்கே வழங்கப்படும் Booker Prize மட்டுமே அவர்தம் அடுத்த கனவாக இருக்கக்கூடும்.
இதற்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய விருதாக ஞானபீடம் உள்ளது.அதனைப் பெற்றுக்கொண்ட கவிப்பேரரசின் புகழ் வானளவாக உயர்ந்து நிற்கிறது. அவர் உண்மை ஞானி என்பது எமக்குத் தெரிந்தாலும்,அதற்கான பட்டம் இந்த ஞானபீட விருது.
விருதுகளின் பெருமை அதன் புகழில் மட்டும் இல்லை; அது எத்தனை பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது என்பதிலும் உள்ளது.
இந்த மக்கள் விகிதம் தான் விருதுகளின் ஜனநாயகத்தை வெளிப்படுத்துகிறது. நான் முன்வைக்கும் இந்தப் பார்வை ஒரு முடிவு அல்ல; ஒரு சிந்தனைக்கான அழைப்பு.