காந்தாரா படக்குழுவை துரத்தும் சோகம் - 3 உயிரிழப்பை தொடர்ந்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
காந்தாரா 2ஆம் பாக படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
காந்தாரா 2 படப்பிடிப்பு
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் காந்தாரா.
கர்நாடகாவின் துளு பேசும் மக்கள் பின்பற்றி வரும் பூத கோலா சடங்கு மற்றும் காடுகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.
தமிழ், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் உருவான இந்த திரைப்படம், ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்தது.
தற்போது, "காந்தாரா: சாப்டர் 1" என்ற பெயரில், படத்தின் 2ஆம் பாகத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வருகிறார்.
படத்தின் 2ஆம் பாக படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே, படக்குழுவினர் உயிரிழக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
தொடர் உயிரிழப்பு
கடந்த மாதம் இந்த படத்தில் தொழில்நுட்பக் கலைஞராக பணியாற்றி வந்த கபில் என்பவர் கேரளாவில் உள்ள சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து, இந்த படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனையடுத்து, படப்பிடிப்பிற்கு நடிகர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று கவிழ்ந்து விபத்தை சந்தித்தது. நல் வாய்ப்பாக இதில் யாரும் உயிரிழக்கவில்லை.
சமீபத்தில், இந்த படத்தில் நடித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜு என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
படகு விபத்து
இந்நிலையில், இன்று நேற்று சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாஸ்திகட்டே அருகே உள்ள மாணி அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஒரு சிறிய படகில் வைத்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.
இதில், நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் 30 பேர் இருந்த நிலையில், படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆழம் அதிக இல்லாத பகுதி என்பதால் படக்குழுவினர் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும், கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் நீரில் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்து குறித்து விளக்கம் கேட்டுமாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த மாதம் படக்குழுவை சேர்ந்த 3 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த நிலையில், தற்போது ஏற்பட்ட படகு விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகள் தற்செயலாக நிகழ்வதா அல்லது அமானுஷ்யமா என படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |