இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறனுக்கு ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்
2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது. இதே போல், இங்கிலாந்தில் The Hundred கிரிக்கெட் தொடர் 21 ஜூலை தொடங்கி நடைபெற உள்ளது.
The Hundred தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான்சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ரூ.2.34 கோடிக்கு சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதலே, அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் தொடரில் சேர்ப்பதில்லை.
அதே போல், இந்திய நிறுவனங்களின் அணிகள் வெளிநாடு லீக்குகளிலும் பாகிஸ்தான் வீரர்களை அணியில் சேர்ப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
இந்நிலையில்,சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் நேற்றைய ஏலத்தில் கலந்து கொண்டு அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்ததற்கு ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2025 ஆம் ஆண்டில் அவர் இந்தியா மற்றும் இந்திய ராணுவத்தை இன்ஸ்டாகிராமில் கேவலமாக பேசியதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மற்றொரு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்கை பர்மிங்காம் பீனிக்ஸ் அணி சுமார் 1.72 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. வேறு எந்த பாகிஸ்தான் வீரர்களும் ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை.
x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை
இப்போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் X கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்தும் விளக்கப்படவில்லை.

தேசியத்தின் அடிப்படையில் வீரர்களைத் தவிர்ப்பது UK-வின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களை மீறும் என ஏலத்திற்கு முன்னதாக, தொடரின் 8 அணி இயக்குநர்களுக்கும் ECB கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் எதிர்ப்புகள் காரணமாக அப்ரார் அகமதுவை அணியில் இருந்து விடுவித்தால், ECB யிடமிருந்து கடும் எதிர்ப்பினை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.
சென்னையை தளமாக கொண்டு இயங்கும் சன் குழுமம், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், SA20 கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் தி ஹண்ட்ரட் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய அணிகளை வைத்துள்ளது.
முன்னதாக வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
கடும் எதிர்ப்பு காரணமாக முஸ்தாபிசுர் ரஹ்மானை KKR நீக்கிய நிலையில், இதனை கண்டித்து இந்தியாவில் நடைபெற்ற T20 உலக கிண்ணத்தை வங்கதேச அணி புறக்கணித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |