கடவுளை சந்திக்க பட்டினி மரணம்... தோண்டி எடுக்கப்பட்ட 400 சடலங்கள்: வெளிவரும் புதிய தகவல்
கென்யாவில் கடவுளை நேரிடையாக சந்திக்கும் பொருட்டு பட்டினியால் உயிரை விட்டவர்கள் எண்ணிக்கை 400 கடந்துள்ளதாகவும், புதிதாக 12 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோண்டி எடுக்கப்பட்ட 400 சடலங்கள்
கென்ய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், இதுவரை 403 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஷகாஹோலா வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் ஊடாக சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,
@reuters
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பாதிரியார் பால் மெக்கன்சி விசாரணை வட்டத்தில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷகாஹோலா வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், மேலும் பலர் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்புடைய தேவாலயத்தில் இருந்து மிக மோசமான நிலையில் பலரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிலர் உயிருடன் மிக ஆபத்தான கட்டத்தில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டினியால் மரணமடைந்த விசுவாசிகள்
கடந்த ஏப்ரல் 13ம் திகதியில் இருந்தே, ஷகாஹோலா வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த தேவாலயத்தில் அதிகாரிகள் சோதனை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பெரும்பாலானோர் பட்டினியால் மரணமடைந்துள்ளனர். சிறார்கள் பலர் கழுத்தை நெரித்தும் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.
Credit: Wachira Mwangi
இந்த தேவாலயத்தின் போதகரான பால் மெக்கன்சி, முன்னர் டாக்ஸி சாரதியாக பணியாற்றி, பின்னர் போதகராக மாறியவர் எனவும், ஏப்ரல் மத்தியில் இருந்தே அவர் விசாரணைக் கைதியாக உள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர் மீது பயங்கரவாதம், இன அழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 7 பிள்ளைகளுக்கு தந்தையான பால் மெக்கன்சி கடந்த 2003ல் இந்த தேவாலயத்தை நிறுவியுள்ளார்.
மீட்கப்பட்ட 65 பேர்கள்
2017ல் விவிலியம் கல்வியை ஊக்குவிப்பது இல்லை என குறிப்பிட்டு, சிறார்கள் பாடசாலைகளுக்கு செல்வதை பால் மெக்கன்சி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், கடந்த மார்ச் மாதம், பெற்றோரின் கட்டுப்பாட்டில் இரண்டு சிறார்கள் பட்டினியால் மரணமடைந்த விவகாரத்தில் மெக்கன்சி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
@getty
கடந்த மாதம் மெக்கன்சியின் தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட 65 பேர்கள் உணவு உட்கொள்ள மறுத்ததை அடுத்து, தற்கொலைக்கு முயன்றதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், 50 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 4,000 தேவாலயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |