370 நாட்கள்... மொத்தம் 8,640 கி.மீ தொலைவு: நடந்தே மக்காவுக்கு சென்ற கேரள இளைஞர்
இந்திய மாநிலம் கேரளாவில் இருந்து இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவின் மக்காவுக்கு நடந்தே சென்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கா நகருக்கு பாதயாத்திரை
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிஹாப் சோத்தூர். இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மக்கா நகருக்கு இவர் பாதயாத்திரையாகவே தமது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 2ம் திகதி முன்னெடுக்கப்பட்ட அவரது பயணம் பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை கடந்து சவுதி அரேபியாவில் நிறைவடைந்துள்ளது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் இஸ்லாமியர்களின் இன்னொரு புனித ஸ்தலமான மதீனாவுக்கு சென்றுள்ளார். அங்கே 21 நாட்கள் தங்கியிருந்த ஷிஹாப், மதீனாவில் இருந்து 440 கி.மீ தொலைவில் உள்ள மக்கா நகரை 9 நாட்களில் நடந்து கடந்துள்ளார்.
மேலும், தமது பயணம் முழுவதும், தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து தொடர்ந்து வெளியிட்டும் வந்துள்ளார். இதனிடையே, இந்தியாவில் இருந்து வாகா எல்லைக்குள் நுழையும் போது, உரிய விசா இல்லை என்பதால் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, போக்குவரத்து விசா பெறுவதற்காக வாகா பகுதியில் பல மாதங்கள் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மக்காவுக்கு நடந்தே செல்வது கனவு
இறுதியில் விசா பெற்றுக்கொண்டவர், பாகிஸ்தான் வழியாக ஈரான் சென்றுள்ளார். அங்கிருந்து ஈராக், குவைத் நாடுகள் கடந்து மக்கா நகரை அடைந்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவுக்கு நடந்தே செல்வது என்பது கனவாக கொண்டிருந்த ஷிஹாப், இந்த பயணத்தின் போது நாள் தோறும் 25 கி.மீ தொலைவு நடந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மொத்தமுள்ள 8,640 கி.மீ பயண தூரத்தை கடக்க அவர் 370 நாட்கள் எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.