பிறந்தநாளை வைத்து தேர்வு செய்த லொட்டரி எண் - ரூ.78 கோடி வென்ற இந்தியர்
பிறந்தநாளை வைத்து லொட்டரி எண் தேர்வு செய்த இந்தியர் ரூ.78 கோடி வென்றுள்ளார்.
ரூ.78 கோடி லொட்டரி
கேரளாவைச் சேர்ந்த 52 வயதான, சுனில் குமார் சதாசிவன் அபுதாபியில் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநரான பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் தன்னுடன் லொட்டரி விளையாடத் தொடங்கிய ஒரு நண்பருடன் சேர்ந்து டிக்கெட் வாங்கியதில் அவர்களுக்கு 100 திர்ஹாம் கிடைத்தது.
அந்த வெற்றியால் கிடைத்த நம்பிக்கையில், அடுத்த குலுக்கலுக்காக மற்றொரு டிக்கெட்டை வாங்கி, 30 மில்லியன் திர்ஹாம்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.78 கோடி) ஜாக்பாட்டை வென்றுள்ளார்.
பிறந்தநாள் எண்
அந்த லொட்டரி எண்ணை தேர்வு செய்தது குறித்து பேசிய சுனில் குமார், "எனக்கு மிகவும் முக்கியமான தேதிகளை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தேன். என் மகளின் பிறந்தநாளில் தொடங்கி, பிறகு என்னுடையதைச் சேர்த்து, பின்னர் என் மனைவியின் பிறந்தநாளைச் சேர்த்தேன்" என தெரிவித்தார்.
மேலும், "குலுக்கலுக்குப் பிறகு இரவு 9.45 மணியளவில் என் கைபேசியைப் பார்த்தேன். நான் ஒரு சிறிய பரிசை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன். வெற்றி எண்களைப் பார்த்தபோது, நான் முழு அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
நான் கண்டதை என்னால் நம்ப முடியவில்லை, அதனால் மனைவியை அழைப்பதற்கு முன் அந்த டிக்கெட்டை நண்பரிடம் காட்டினேன். என் மகளுக்குக் கல்வி கற்பித்து, அவள் ஒரு மருத்துவராவதைப் பார்ப்பதே எனது மிகப்பெரிய கனவு.
என் மனைவிக்கு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதே அவளுடைய விருப்பமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. நாங்கள் இந்தத் தொகையை வென்றபோது, 'நாம் என்ன செய்வோம்? என்று அவள் கேட்டாள்.
நாங்கள் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அதனால் மற்றவர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நம்புகிறோம். பணம் கையில் கிடைத்தவுடன், முதலில் என் மகளுக்குப் பரிசு வாங்கச் செல்வேன். வீட்டில் உள்ள பழுதுபார்க்கும் பணிகளை முடிக்க வேண்டும்.
நான் சிறு வயதிலிருந்தே உழைத்து வருகிறேன். இப்போது, நான் சிறிது ஓய்வெடுக்கப் போகிறேன். எனக்குத் தெரிந்த சிலருக்கு வீடுகள் இல்லை, அவர்களுக்காக நான் வீடுகளைக் கட்டிக் கொடுக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |