இரண்டு மாதங்களில் திருமணம்... உக்ரைன் அருகே ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாலுமி
துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர்.
இரண்டு மாதங்களில்
உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) என்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யா மின்னல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் கொல்லப்பட்ட அகில் ஜோயன் காசர்கோடு மாவட்டத்தின் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர். 26 வயதான இவர், அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் செய்துகொள்ள இருந்தார்.
ஜோயன் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார்; அவர் விரைவில் தனது வேலையை மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களின் தகவல்படி, அந்த இளம் மாலுமி, மின்சாதனக் கடையில் பணிபுரியும் ஜோயன் மற்றும் காப்பீட்டு முகவரான சாலி ஆகியோரின் ஒரே மகன் என்றே தெரிய வருகிறது.
மட்டுமின்றி, அவர்கள் ஒரு சாதாரணக் குடும்பம் எனவும், அவர்களின் எதிர்காலம் பெரும்பாலும் அகிலைச் சார்ந்தே இருந்தது எனவும், மிக சமீபத்தில்தான் சொந்தமாக ஒரு வீட்டை கட்டியிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், அகில் ஜோயன் தனது நிச்சயதார்த்த விழாவிற்காக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்ததாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் அகிலின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அகில் பணிபுரிந்த கப்பல் நிறுவனத்திடமிருந்து திங்கட்கிழமை மாலையில் வந்த மின்னஞ்சல் மூலமாகவே அவரது குடும்பத்தினர் அவரது இறப்புச் செய்தியை அறிந்துகொண்டனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விவரங்களைச் சேகரித்து, தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய முயற்சித்து வருவதாக கிராம நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கேரள முதலமைச்சர்
அகில் தனது 19-வது வயதில் வணிகக் கப்பலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனிடையே, கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலில்,
ரஷ்யத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மாலுமி கொல்லப்பட்ட விவகாரத்தில், கூடுதல் தகவல்களைத் திரட்டுவதற்காக ரஷ்யத் தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்துடன் வெளிநாடு வாழ் கேரளத்தவர் விவகாரத் துறை (NORKA) அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்வதேச செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவின் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று, ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யப் படைகளால் மின்னல் தாக்குதலுக்கு இலக்கானதாகவும்,
இதில் சிரியாவைச் சேர்ந்த ஐந்து மாலுமிகள் உட்பட 10 பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் உக்ரைனின் கடல்சார் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் இருந்து சோளம் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பலிலிருந்து காயங்களுடன் எட்டு பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |