அலி காமெனியின் சடலம் மீட்பு... உறுதிபட தெரிவிக்கும் இஸ்ரேல் அதிகாரிகள்
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடந்திய தாக்குதலில், உயர் தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டுள்ளது உறுதி என இஸ்ரேல் தரப்பு மீண்டும் தெரிவித்துள்ளது.
காமெனியின் சடலம்
ஈரானின் உயர் தலைவர் அலி காமெனியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலி காமெனி கொல்லப்பட்டுள்ளது உறுதி என்றும் வலுவான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காணொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நெதன்யாகு, இன்று பகல் முன்னெடுத்துள்ள வான்வழித் தாக்குதலில் அலி காமெனியின் குடியிருப்பு வளாகங்கள் குறி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அலி காமெனி உயிருடன் இல்லை என்பது மட்டும் உறுதி என தெரிவித்துள்ள நெதன்யாகு, அலி காமெனி நிர்வாகத்தின் முதன்மையான அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த சில நாட்களில் ஈரானின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைக்க இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால், எதிரி உளவியல் போரை முன்னெடுக்கிறான், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உயர் தலைவரின் மக்கள் தொடர்புத் தலைவரை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி, ஈரானிய செய்தி நிறுவனங்களான Tasnim மற்றும் Mehr வெளியிட்டுள்ள தகவலில், உயர் தலைவர் உறுதியாகவும் களத்தை நிர்வகிப்பதில் உறுதியானவராகவும் இருக்கிறார் என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் நம்புவதாக
அலி காமெனி தொடர்பில் இஸ்ரேல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள தகவலையே அமெரிக்காவும் நம்புவதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அலி காமெனி மட்டுமின்றி, ஈரானின் முத்த தலைவர்கள் 5 முதல் 10 பேர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
அலி காமெனி கொல்லப்பட்டால், அவருக்குப் பதிலாக புரட்சிகரப் படையைச் சேர்ந்த கடும்போக்கு நபர்கள் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்றே தாக்குதல்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை மதிப்பீடு செய்தது.

இதனிடையே, அலி காமெனி கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாகவே ட்ரம்பும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அந்த பொறுப்புக்கு யார் வருவார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப்,
அது தமக்கு தெரியாது என்றும், ஆனால் ஒருகட்டத்தில் ஈரான் தரப்பில் இருந்து தம்மை தொடர்புகொண்டு, தமக்கு விருப்பமுள்ள நபரைத் தெரிவு செய்யக் கோரவும் வாய்ப்பிருப்பதாக ட்ரம்ப்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |