உயிருடன் நடமாட அனுமதிக்கமாட்டோம்... ஈரானின் காமெனிக்கு எதிராக கொக்கரிக்கும் இஸ்ரேல்
டெல் அவிவ் அருகே மருத்துவமனை ஒன்றில் ஈரான் ஏவுகணைத் தாக்கியதை அடுத்து கொந்தளித்துப் போன இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் ஆயத்துல்லா காமெனியை உயிருடன் விடுவதாக இல்லை என கொக்கரித்துள்ளார்.
போர்க்குற்றங்கள்
இஸ்ரேலில் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு காமெனி பொறுப்பேற்க வேண்டும் என்றும் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். கோழைத்தனமான ஈரானிய சர்வாதிகாரி பதுங்கு குழியின் ஆழத்தில் அமர்ந்து கொண்டு இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணைகளை வீசுகிறார்.
இவை மிகவும் கடுமையான வகையான போர்க்குற்றங்கள், காமெனி தனது குற்றங்களுக்கு பொறுப்பேற்கப்படுவார் என அமைச்சர் காட்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேல் இராணுவம் தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொண்டு காமெனியை பழிவாங்கும் எனவும் காட்ஸ் சபதம் செய்துள்ளார். இஸ்ரேலுக்கு கடும் அச்சுறுத்தலாக நீடித்துவரும் ஈரானுக்கு எதிராக தாக்குதலை உக்கிரப்படுத்த வேண்டும் என தாமும் பிரதமர் நெதன்யாகும் இராணுவத்தை அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையைத் தாக்கியது, அது இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுத்துறை தளம் என்றும், சுகாதார வசதி அல்ல என்றும் ஈரான் இன்று விளக்கமளித்துள்ளது.
சொரோகா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ கட்டளை மற்றும் புலனாய்வுத் தளம் (IDF C4I) மற்றும் இராணுவ புலனாய்வு முகாம் ஆகியவையை இலக்கு வைத்தே ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நிபந்தனையற்ற சரணடைதல்
இஸ்ரேலியப் படைகள் தெஹ்ரானில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, அவற்றில் யூரேனியம் செறிவூட்டல் தொடர்பான வசதிகள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனையற்ற சரணடைதல் என்ற வலியுறுத்தலை ஈரான் நிராகரித்துள்ளது. மட்டுமின்றி, இஸ்ரேலுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்ற மிரட்டலும் விடுத்துள்ளது.
சொரோகா மருத்துவமனை தாக்கப்பட்டதை போர் குற்றமென சீறும் இஸ்ரேல், ஹமாஸ் படைகளை ஒழிப்பதாகக் கூறிகொண்டு காஸாவில் உள்ள மொத்தம் 36 மருத்துவமனைகளை குண்டுவீச்சால் தரைமட்டமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |