முப்பது நிமிடங்களில் மூன்று எச்சரிக்கை... ட்ரம்பை குறிவைத்த ஈரானின் காமெனி
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்று மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையில், உயர் தலைவர் காமெனியின் கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பை குறிவைத்து
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில், ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஆர்வமாக இருப்பதாக நம்புவதாகக் கூறினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் சமீபத்திய அறிக்கைகள் ட்ரம்பின் கருத்துகளுக்கு முரணாக உள்ளது.
காமெனியின் சமீபத்திய மூன்று சமூக ஊடகப் பதிவுகள் ஜனாதிபதி ட்ரம்பை குறிவைத்துள்ளதுடன், அமெரிக்காவின் இராணுவ பலத்தையும் விமர்சனம் செய்துள்ளது.
அத்துடன் ஈரானுக்கு அருகில் அமெரிக்காவின் அதிகரித்து வரும் இராணுவ பிரசன்னம் குறித்தும் எச்சரித்துள்ளது. காமெனி குறிப்பிடுகையில், 47 ஆண்டுகளாக அமெரிக்காவால் ஈரானை ஒழிக்க முடியவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
உண்மையில் அது ஒரு நல்ல ஒப்புதல் வாக்குமூலம், உங்களாலும் அது முடியாது என்பதை உங்கள் ஒப்புதல் வாக்குமூலம் உறுதி செய்கிறது என்றார்.
மேலும், உலகிலேயே வலிமையான இராணுவப் படை அவர்களிடம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார் என குறிப்பிட்டுள்ள காமெனி, உலகின் வலிமையான இராணுவப் படை சில சமயங்களில் மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு கடுமையாகத் தாக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அச்சுறுத்தும் வகையில்
அத்துடன், அமெரிக்கர்கள் தொடர்ந்து ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாகக் கூறுகிறார்கள். நிச்சயமாக, ஒரு போர்க்கப்பல் என்பது ஒரு ஆபத்தான இராணுவ வன்பொருள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், அந்தப் போர்க்கப்பலை விட ஆபத்தானது, அந்தப் போர்க்கப்பலை கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பக்கூடிய ஒற்றை ஆயுதம் என்பதை மறக்க வேண்டாம் என்றும் மிரட்டல் விடுத்தார்.

ஜெனீவா பேச்சுவார்த்தைகள் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது சுற்றாகும். ஆனால், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கியுள்ள அமெரிக்கா, அச்சுறுத்தும் வகையில் ஈரான் அருகே போர்க்கப்பல்களையும் நிறுத்தியுள்ளது.
மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள USS Gerald R Ford கப்பலும் ஈரான் நோக்கி புறப்பட்டுள்ளது, வாரங்களுக்குள் மத்திய கிழக்கில் வந்து சேரலாம்.
ஈரான் - அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளை ஓமன் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல்புசைடி மத்தியஸ்தம் செய்கிறார். அமெரிக்கா தரப்பில் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |