ஒலிம்பிக் போட்டியில் விளையாட வந்த இடத்தில் புகலிடம் கோரி கதறிய வீராங்கனை: திடுக்கிட வைத்துள்ள ஒரு செய்தி
என்னை என் நாட்டுக்கு அனுப்பாதீர்கள் என்று கூறி, ஒலிம்பிக் போட்டியில் விளையாட வந்த ஒரு தடகள வீராங்கனை கதறிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியடையவைத்துள்ளது. Krystsina Tsimanouskaya (24) பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை.
200 மீற்றர் பந்தயத்தில் பங்கேற்க காத்திருந்த அவரை திடீரென 4x400 ரிலே ஓட தயாராகுமாறு அவரது பயிற்சியாளர் வற்புறுத்தியிருக்கிறார்.
அப்படி அவர் 200 மீற்றர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும், அவரது வேலை பறிக்கப்படும் என்றும், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவரது பயிற்சியாளர் எச்சரித்துள்ளார்.
ஒரு வழியாக 4x400 ரிலே ஓட Krystsina சம்மதித்த நிலையில், விளையாட்டுப் போட்டி துவங்க சிறிது நேரமே இருக்கும் நிலையில், உடனடியாக நாட்டுக்குத் திரும்ப தயாராகுமாறு அவருக்கு உத்தரவு வந்துள்ளது. இது விளையாட்டுத்துறையின் உத்தரவு அல்ல, உயர் மட்ட உத்தரவு என்று Krystsinaவிடம் கூறியுள்ளார் அவரது பயிற்சியாளர்.
விடயம் என்னவென்றால், ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் பெலாரஸ் நாட்டின் அதிபரான Alexander Lukashenko, Krystsinaவைக் குறிவைத்துள்ளதாகவும், அவரைக் கடத்தி நாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் Krystsinaவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தான் நாட்டுக்குத் திரும்பினால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை புரிந்துகொண்ட Krystsina, வேண்டுமென்றே புறப்படுவதை தாமதப்படுத்தியிருக்கிறார்.
உறவினர்கள் மற்றும் அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை கோர, அவர்கள் ஜப்பான் விமான நிலையத்திலுள்ள பொலிசாரிடம் உதவி கோருமாறு ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
அதன்படி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தன்னை பெலாரஸுக்கு அனுப்பவேண்டாம் என ஜப்பான் பொலிசாரிடம் Krystsina கண்ணீருடன் மன்றாட, உடனடியாக அவரை அவர்கள் தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
தற்போது, ஆஸ்திரியா, ஜேர்மனி அல்லது போலந்து நாட்டில் புகலிடம் கோர இருப்பதாக தெரிவித்துள்ளார் Krystsina.
இந்த பெலாரஸ் நாட்டின் அதிபரான Alexander Lukashenkoதான், தன்னை விமர்சிப்பவரான பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்வதற்காக நடுவானில் பயணிகள் விமானம் ஒன்றைக் கடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.