தலையில் பேண்ட்-எய்டுடன் பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங்-உன்! உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்
கடந்த சில தினங்களுக்கு முன் தலையில் பேண்ட்-எய்டுடன் பொது வெளியில் தோன்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடல்நிலை குறித்து தென் கொரிய தேசிய புலனாய்வு சேவை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜூலை மாத இறுதியில் வட கொரிய இராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது கிம் ஜாங்-உன் தலையின் பின்புறத்தில் பேண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியானது.
இது ஊடகங்களில் வட கொரிய தலைவரின் உடல்நலம் குறித்த புதிய யூகங்களை கிளப்பியது.
சமீபத்திய மாதங்களில் கிம் 10-20 கிலோ எடை குறைந்ததாகவும், இதற்கு உடல்நல பிரச்சினை தான் காரணம் என ஜூலை மாத தொடக்கத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எனினும், இந்த யூகங்களை முற்றிலுமாக மறுத்த வட கொரிய அரசு நடத்தும் ஊடகம், நாட்டின் நலனுக்காக உழைத்ததால் நாட்டின் தலைவர் உடல் எடையை குறைத்து விட்டார் என்று விளக்கமளித்தது.
இந்நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சில நாட்களுக்கு முன்பு தனது தலையின் பின்புறத்தில் போண்ட்-எய்டுடன் காணப்பட்ட போதிலும் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதுமில்லை என்று தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (என்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற அமர்வில், கிம் உடல் நலத்துடன் இருப்பதாக கூறிய உளவுத்துறை, சில நாட்களுக்குப் பிறகு பேண்ட்-எய்ட் நீக்கப்பட்டது மற்றும் எந்த தழும்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.