ஜீரணிக்கவே முடியல! நாங்க செஞ்ச தவறு... ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பின் நொந்து கொண்ட பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல்
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியுடனான தோல்வி குறித்து மனம் நொந்து பேசியுள்ளார் பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல்.
ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியின் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 4 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் அதை கூட எடுக்க முடியாமல் அந்த அணி தோற்றது. தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல், இந்த தோல்வி ஜீரணிக்கவே முடியாத விஷயம். இதற்கு முன் இதேபோல ஒருமுறை தோற்றிருந்தோம்.
அதிலிருந்து நாங்கள் இன்னும் பாடம் கற்கவில்லை எனத் தோன்றுகிறது. சில சமயங்களில் இயல்பான ஆட்டத்தை ஆடாமால், அனைத்து பந்துகளையும் தூக்கியடிக்க முயற்சிப்பார்கள்.
அப்போது ரன்கள் கிடைக்கவில்லை என்றால், பதற்றம்தான் ஏற்படும். கடைசி ஓவரில் அந்த தவறை செய்ததே, விக்கெட்களை பறிகொடுக்க காரணமாக அமைந்தது.
இதை அனைத்தையும் மறந்துவிட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என கூறியுள்ளார்.