9 கோடிக்கு எடுத்து சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிய இளம் வீரர்! வைரலாகும் புகைப்படம்
டெல்லி அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கிருஷ்ணப்பா கவுதம் பார்க்கப்படுகிறார்.
நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரின் 4-வது பந்தில் இலக்கை எட்டிப் பிடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டெல்லி அணிக்கு கடைசி 16 பந்தில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, ஆட்டத்தின் 18-வது ஓவரை சென்னை அணியின் நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ வீசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஓவரின் போது, டெல்லி அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஹிட்மயர் ஸ்டிரைட் திசையில் தூக்கி அடிக்க முற்பட்டார்.
அப்போது பந்தானது அங்கே பீல்டிங் நின்று கொண்டிருந்த கிருஷ்ணப்பா கவுதமிடம் சென்றது. அழகான அந்த கேட்சை கிருஷ்ணப்பா கவுதம் ஆஸ்திரேலியன் ஸ்டைலில் பிடிக்கிறேன் என்று கோட்டை விட்டுவிட்டார்.
அந்த கேட்சை மட்டும் அவர் பிடித்திருந்தால், ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும். ஏனெனில் அப்போது ஹிட்மயர் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின் இறுதியில் ஹிட்மயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 28 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக மாற, கிருஷ்ணப்பா கவுதம் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டார்.
சென்னை ரசிகர்களும், தோல்விக்கு கிருஷ்ணப்பா கவுதம் தான் காரணம் என்று புலம்பி வருகின்றனர். மேலும் கிருஷ்ணப்பா கவுதமை சென்னை அணி கடந்த ஆண்டு ஏலத்தில் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
ஆனால், இதுவரை அவர் எந்த ஒரு போட்டியிலும் இறக்கப்படவில்லை, நேற்று மாற்றுவீராக பீல்டிங் செய்ய வந்து, இப்படி ஒரு கேட்ச்சை விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.