ஐபிஎல் அணி ஒப்புதலுக்கு கட்டாயப்படுத்திய காங்கிரஸ் தலைவர்கள் - போட்டுடைத்த லலித் மோடி
கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ஒப்புதல் வழங்க காங்கிரஸ் தலைவர்கள் தன்னை கட்டாயப்படுத்தியதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
கொச்சி டஸ்கர்ஸ்
2011 ஐபிஎல் தொடரில் அறிமுகமான மஹேலா ஜெயவர்த்தனே தலைமையிலான கொச்சி டஸ்கர்ஸ் அணியில், ரவீந்திர ஜடேஜா, மெக்கல்லம், ஆர்.பி.சிங், விவிவிஎஸ் லக்ஸ்மனன், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இருந்தனர்.

இந்த தொடரில் 14 போட்டிகளில், 6 வெற்றி 8 தோல்வியுடன் 8 வது இடத்தை பிடித்தது.
அணி உரிமையாளர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, 2011 சீசன் தொடங்குவதற்கு முன்பு செலுத்தப்பட வேண்டிய உரிமைக் கட்டணத்தின் 10% வங்கி உத்தரவாதத் தொகையை அந்த அணி செலுத்தத் தவறியது காரணமாகி அணியின் உரிமத்தை பிசிசிஐ ரத்து செய்தது.
இந்த ஒரு தொடருடன் அந்த அணி நீக்கப்பட்டது. இதை எதிர்த்து, கொச்சி டஸ்கர்ஸ் அணியின் உரிமையாளரான ரெண்டென்ஸ்வஸ் ஸ்போர்ட் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ.384 கோடி இழப்பீடு வழங்க கடந்த ஆண்டு பிசிசிஐ க்கு உத்தரவிட்டது. இழப்பீடு வேண்டாம், தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என அணியின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சுனந்தா புஷ்கர் யார்?
இந்நிலையில், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு உரிமம் வழங்குவதற்கு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "கொச்சி கூட்டமைப்பு 350 மில்லியன் டொலர் ஏலத்தில் உரிமையை வென்ற பிறகு உரிமையாளர் கட்டமைப்பு குறித்து கவலைகள் எழுப்பினேன்.
கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தில், சுனந்தா புஷ்கர் என்ற அந்தப் பெண்ணைத் தவிர மற்ற அனைத்துப் பங்குதாரர்களும் இருந்தனர். சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு நீங்கள் 25% பங்குகளை வழங்குகிறீர்கள். வருவாயில் 15%ஐ விட்டுக்கொடுக்கிறீர்கள். அவர் யார்?

பங்குதாரர்களில் 75% பேர் முழு செலவையும் ஏற்கும் நிலையில், மற்றொருவர் 25% இலவசப் பங்கைப் பெறும் ஒரு கூட்டமைப்புக்கு, ஒருவரால் எப்படி 350 மில்லியன் டாலர் செலுத்த முடியும்? எனக்கேள்வி எழுப்பினேன்.
அதில் ஒருவர் "அவர் ஒரு வாகன விற்பனையாளரின் மகள், ஒரு பிரபலமான சந்தைப்படுத்துபவர்" என்றார்.
நான் இந்தியாவில் ஒரு சந்தைப்படுத்துபவன், அவர் யார் என்றே எனக்குத் தெரியாது' என்றேன்.
கட்டாயப்படுத்திய காங்கிரஸ் தலைவர்கள்
அதன் பின்னர் அப்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் என்னை தொலைபேசியில் அழைத்து, 'லலித், சுனந்தா புஷ்கரைப் பற்றி கேட்காதே. அவர் என் நல்ல நண்பர்' என்றார்.

நான் ஏன் என்று கேட்டேன், அதற்கு அவர், அப்படி கேட்டால், காலையில் உன் வீட்டில் சோதனை நடத்த ஏற்பாடு செய்வேன்' என்றார்.
நான், 'நீ யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக இருக்கலாம், ஆனால் இதை என்னிடம் சொல்ல ஒருபோதும் துணியாதே' என்றேன். நான் தொலைபேசியை ஓங்கி வைத்துவிட்டு, கையெழுத்திட மாட்டேன் என்று சொன்னேன்" என தெரிவித்தார்.
அதன் பின்னர் சோனியா காந்திக்கு அரசியல் ஆலோசகராக இருந்த அகமது படேல், மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆகியோர் தொலைபேசியில் அழைத்து அழுத்தம் கொடுத்தனர்.

அப்போதைய பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் நள்ளிரவில் அழைத்து, உரிமையாளர் ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திடுமாறு அறிவுறுத்தினார்.

'சஷாங்க், நான் இந்த ஒப்பந்தத்தில் கட்டாயத்தின் பேரில் கையெழுத்திடுவேன். மேலும், பிசிசிஐ தலைவர் என்னை கையெழுத்திடக் கட்டாயப்படுத்தினார் என இந்த ஆவணத்தில் அதைக் குறித்துக்கொள்வேன்' என்று கூறிவிட்டு சொன்னபடியே அதைக் குறித்துக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.
#WATCH | On the 2010 IPL Kochi scandal, IPL founder and first chairman Lalit Modi says, "Sonia Gandhi was backing Shashi Tharoor. I got calls from Ahmed Patel and Pranab Mukherjee in those days. You had that p@** Rajeev Shukla coming up to me and say 'Chalo Ahmed Patel aa raha… pic.twitter.com/eYX8zIXu4h
— ANI (@ANI) June 4, 2026
இது தொடர்பான குற்றச்சாட்டில் அப்போது சசிதரூர் தனது மத்திய வெளியுறவு இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிதரூர் மற்றும் சுனந்தா புஷ்கருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் அது 3வது திருமணம் ஆகும்.

2014 ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சசிதரூர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |