ஜேர்மனியில் வாங்கிய Lamborghini காரை சில மணிநேரங்களில் பொலிஸிடம் பறிகொடுத்த நபர்! டென்மார்க்கில் நடந்த வேடிக்கை சம்பவம்
விலையுயர்ந்த லம்போர்கினி காரை வாங்கிய ஆர்வத்தில் நோர்வே நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், அதனை படுவேகமாக ஓட்டிச்சென்றதால் பொலிஸிடம் பறிகொடுத்த வேடிக்கையான சம்பவம் டென்மார்க்கில் நடந்துள்ளது.
நோர்வே நாட்டில் வசிக்கும் ஈராக்கை செர்ந்த பெயர் குறிப்பிடப்படாத நபர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை ஜேர்மனிக்கு சென்று 310,000 டொலர் விலை கொடுத்து Lamborghini Huracan எனும் அதிவேக சொகுசு காரை வாங்கியுள்ளார்.
அங்கிருந்து நோர்வேவுக்கு (1,250 கிமீ தூரம்) காரை ஓட்டிச்செல்ல முடிவெடுத்துள்ளார். காரை ஓட்டிச்செல்லும் ஆர்வத்தில் அங்கிருந்து, காருடன் புறப்பட்ட அந்த நபர், டென்மார்க் நாட்டை கடந்து சென்றுள்ளார்.
அப்போது, அங்குள்ள அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு நெடுஞ்சாலையில், 236 கிமீ வேகத்தில் அந்த நபர் சென்றுள்ளார்.
இந்த காரை கண்காணித்த டேனிஷ் பொலிஸார், அந்த காரை சுற்றிவளைத்து, அதிவேகத்தில் சென்று போக்குவரத்து விதிகளை மீறியா குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்ததுடன், அந்த காரையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
ஒரு புதிய டேனிஷ் சட்டத்தின் கீழ், பொறுப்பற்ற ஓட்டுநர்களின் வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விடலாம், அந்த பணம் டேனிஷ் கஜானாவிற்கு செல்லும்.
மேலும், வேகமாக சென்றதற்காக அந்த காரின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்படும்.
இவை அனைத்தும் கார் வாங்கிய சில மணிநேரங்களில் நடந்துள்ளது. விலை உயர்ந்து அதிவேக சொகுசு காரை கடல்கடந்து சென்று வாங்கி, அதனை சிலமணிநேரங்களில் வேறு நாட்டில் உள்ள பொலிஸிடம் பறிகொடுத்த இந்த வேடிக்கையான சம்பவம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.