வேகமாக பரவும் Omicron தொற்று... புதிய தடை விதிப்புகளுக்கு தயாராகும் ஐரோப்பிய நாடுகள்
உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் புதிய Omicron கொரோனா மாறுபாடு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ஆபிரிக்காவின் பொஸ்வானா நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா மாறுபாடான Omicron தொற்று, தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
பல நாடுகள் தென்னாபிரிக்காவுக்கான நேரடி விமான சேவைகளை ரத்து செய்துள்ள நிலையில், முக்கிய நாடுகள் பல விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஊரடங்கு, பயணத்தடை உள்ளிட்ட விதிகளை அமுலுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்திரியா டிசம்பர் 11 வரையில் முதற்கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளதுடன், கட்டாய தடுப்பூசிக்கான சட்ட திருத்தம் கொண்டுவர ஆயத்தமாகி வருகிறது. இதனால் பிப்ரவரி மாதத்திற்குள் அனைஅவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என ஆஸ்திரியா அரசு நம்புகிறது.
ஜேர்மனியில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்கள் கிறிஸ்துமஸ் வரையில் பொதுவெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தாலியில் கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களும், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்களும் மட்டுமே பணிக்கு செல்ல முடியும். மேலும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் முடிவுக்கு இத்தாலி அரசு இன்னமும் வரவில்லை என்றே கூறப்படுகிறது.
ஐரோப்பாவில் மட்டும் தற்போதைய நிலவரப்படி 15 நாடுகளில் Omicron தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
உண்மையில் Omicron தொற்று தென்னாபிரிக்காவில் அல்ல ஐரோப்பாவிலேயே முதலில் கண்டறியப்பட்டதாகவும் நிபுணர்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவை பொறுத்தமட்டில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்றில் இருந்து மீழ்வது மிகக் கடினமாதாகவே பார்க்கப்படுகிறது.