வாதவலி வீக்கம், காக்கை வலிப்புக்கு இந்த செடியின் இலை வைத்தே குணமாக்கிடலாம்!
எருக்கன் செடியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாம் சாலையோரங்களில் காண்கின்ற சாதாரண எருக்கஞ்செடி. மற்றொன்று தெய்வீக மரமாக கருதப்படும் வெள்ளை எருக்கன் செடி.
வெள்ளெருக்கன் செடி பல அற்புதமான ஆற்றல்கள் கொண்ட தெய்வீக மூலிகையாகும். இந்த வெள்ளெருக்கு செடியை பற்றி சித்தர்கள் கண்டுபிடித்த சித்த வைத்தியத்தில் மனிதர்களின் பல நோய்களை தீர்க்கம் ஒரு அற்புதமான விருட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வறண்ட பிரதேசத்திலும் வளரும். ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும்.
அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும். எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும்.
இலை நஞ்சு நீக்குதல், வாந்தியுண்டாக்குதல், பித்தம் பெருக்குதல், வீக்கம்-கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களையுடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்குதல், முறைநோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது. பால் புண்ணுண்டாக்கும் தன்மை கொண்டது.
எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும். சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும். கிராமப்புறங்களில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர். இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும். அத்துடன் முள்ளும் வந்துவிடும்.
''எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது''
என்கிறது சித்தர்பாடல்.
பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துகொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.
உடம்பில் கட்டிகள்
உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும்.
இலைகள்
எருக்கன் செடியின் இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால், வாய் வழியாகச் சுவாசித்தால், மார்புச் சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும்.
இதன் இலைகள், பூக்கள், வேர், பட்டைகள், எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.
பாம்பு கடி விஷமருந்து
நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.
வயிற்றுப் பூச்சி
சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.
வாதவலி வீக்கம்
எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.
காக்கை வலிப்பு
எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.
பல்வலி
எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.
குதிங்கால்
வலி
குதிகாலில் வலி வந்தால், செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும்.