இஸ்ரேலின் பழிவாங்கல்... புதிய போருக்கான தொடக்கம் என எச்சரித்த நாடொன்றின் பிரதமர்
லெபனான் ஒரு புதிய போரின் விளிம்பில் தத்தளித்து வருவதாக அந்த நாட்டின் பிரதமர் நவாஃப் சலாம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை
லெபனான் பிரதேசத்திலிருந்து ஏவப்படும் ராக்கெட் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையிலேயே பிரதமர் நவாஃப் சலாம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தெற்கு எல்லையில் திடீரென்று உருவான இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அபாயங்களை கருத்தில் கொண்டே பிரதமர் நவாஃப் சலாம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு எல்லையில் உருவாகியுள்ள இராணுவ நடவடிக்கைகள் லெபனான் மற்றும் அதன் மக்களை பழிவாங்கும் என்றே அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவத் தலைவர் இயால் ஜமீரின் அறிக்கை ஒன்றில், இடைமறிக்கப்பட்ட ராக்கெட்டுகளுக்கு இராணுவம் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்று உறுதியளித்ததை அடுத்தே பிரதமர் நவாஃப் சலாம் எச்சரித்துள்ளார்.
போர் மற்றும் அமைதி
மேலும், ஒப்பந்தத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு லெபனானுக்கு உண்டு என்று ஜமீர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இன்னொரு போருக்கு லெபனான் தயாரல்ல என்றே பிரதமர் நவாஃப் சலாம் குறிப்பிட்டுள்ளார்.
போர் மற்றும் அமைதி விடயங்களில் லெபனான் முடிவெடுக்கிறது என்பதைக் காட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய பதட்டங்கள் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான ஒரு வருட கால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்நிறுத்தத்தை முறியடிக்க வாய்ப்புள்ளதாகவே அச்சம் எழுந்துள்ளது.
இந்த வலுவற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்திய ராக்கெட் தாக்குதல்களின் அதிகரிப்பால் சிக்கலை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |