10,500 கொலைக் குற்றங்களுக்கு உடந்தை: பெண்ணுக்கு ஜேர்மனியில் அளிக்கப்பட்டுள்ள குறைவான தண்டனை
ஜேர்மனியில், 10,500 கொலைக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையோ வெறும் இரண்டே ஆண்டுகள்தான் என்னும் விடயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றத்தையளித்துள்ளது.
10,500 கொலைக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த பெண்
Irmgard Furchner (97) என்ற பெண்ணுக்கு, 10,500 கொலைக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் யார் என்றால், Stutthof என்ற நாஸிக்களின் சித்திரவதை முகாம் ஒன்றில் பணியாற்றியவர் ஆவார்.
அவர் பணியற்றிய அந்த சித்திரவதை முகாமில் பலர் பட்டினியாலும், கடுங்குளிரில் உறைந்தும் சாக விடப்பட்டார்கள். 63,000 முதல் 65,000 பேர், அவர்களில் சுமார் 28,000 பேர் யூதர்கள், Stutthofஇல் கொலை செய்யப்பட்டார்கள்.
ஆகவேதான், அந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக Irmgardக்கு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏமாற்றம்
ஆனால், Irmgardக்கு கொடுக்கப்பட்டுள்ளது வெறும் இரண்டாண்டுகள் சிறைத்தண்டனைதான். அதுவும், அவர் இப்போது உடனடியாக சிறைக்குச் செல்லப்போவதில்லை. மீண்டும் ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே அவர் சிறை செல்வார்.
ஆகவே, அந்த சித்திரவதை முகாம்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
ஒரு 97 வயது பெண்ணை சிறைக்கு அனுப்ப யாருக்கும் விருப்பம் இல்லைதான். ஆனாலும், கடையில் ஒரு சிறிய பொருளை திருடியவருக்கே இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 10,000 கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவருக்கும் அதே தண்டனையானால், அது எப்படி நியாயமாகும் என்கிறார்கள் அவர்கள்.