புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்
பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்
ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆனால், அவர் பிரதமராவதற்கு முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஆம், லேபர் கட்சியைச் சேர்ந்த சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன்டி பர்னாமுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
அந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம் என அவர்கள் ஆன்டி பர்னாமை வலியுறுத்தியுள்ளார்கள்.
அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஒன்றை அறிமுகம் செய்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.

ஆம், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஷபானா புது விதி ஒன்றை அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
எனவே, இது சரியல்ல, ஏற்கனவே பல ஆண்டுகள் பிரித்தானியாவில் விதிகளைப் பின்பற்றி சட்டப்படி வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோரை குறிவைக்கவேண்டாம். புதிய விதிகளைக் கொண்டுவந்து அவர்களை கடினமான சூழலுக்கு உள்ளாக்கவேண்டாம் என ஆன்டி பர்னாமுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆக, பதவிக்கு வரும் முன்பே, ஆன்டி பர்னாமுக்கு சிக்கல் துவங்கிவிட்டது, அதுவும், அவரது கட்சிக்குள்ளிருந்தே!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |