முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொலை - லிபியாவில் பதற்றம்
முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சைஃப் அல்-இஸ்லாம் கடாபி
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி படுகொலை செய்யப்பட்டார்.

கடாபியின் ஆட்சிக்காலத்தில் அவரது மகன்களில் ஒருவரான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) லிபியாவில் முக்கிய நபராக வலம் வந்தார். கடாபியின் அரசியல் வாரிசாகவே இவர் கருதப்பட்டார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கல்வி பயின்ற சைஃப் அல்-இஸ்லாம், சரளமாக ஆங்கிலம் பேசுவார். சைஃப் அல்-இஸ்லாம் மேற்கத்திய நாடுகளின் நட்பு முகமாக கருதப்பட்டார்.

கடாபியின் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு பின்னர், பழங்குடி வேடத்தில் சைஃப் அல்-இஸ்லாம், அண்டை நாடான நைஜருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது அபுபக்கர் சாதிக் படைப்பிரிவு போராளிகளால் கைது செய்யப்பட்டு, விமானம் மூலம் ஜின்டானுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது. 2017 ஆம் ஆண்டில் பொதுமன்னிப்பு பெற்று விடுதலை செய்யப்பட்டார்.
தலைமைறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், 2021 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால், அவர் மீதான வழக்குகளை காரணம் காட்டி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

சுட்டுக்கொலை
இந்நிலையில் இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் ஜின்டன் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத 3 நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, துப்பாக்கிதாரிகள் சிசிடிவி கேமராவை முடக்கியதாக தெரிய வந்துள்ளது. சைஃப் கடாபியின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த அப்துல்லா உத்மான் இந்த மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதுவரை எந்த ஆயுதக்குழுக்களும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |