லண்டனில் இருந்து வாட்ஸ் அப்பில் வந்த ஒரு புகைப்படம்! லட்சக்கணக்கில் பணத்தை இழந்த தமிழர்... எச்சரிக்கை செய்தி
லண்டனில் இருந்து விலையுயர்ந்த பரிசு வரும் என் நம்பி தமிழர் ஒருவர் லட்சங்களில் பணத்தை இழந்துள்ளார்.
தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஓங்கநாதன். முதுகலை பட்டம் முடித்து விவசாயம் செய்கிறார். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 14ஆம் திகதி ஒரு எண்ணிலிருந்து 'வாட்ஸ் ஆப்'பில் ஒரு புகைப்படம் வந்தது.
அதிலிருந்தவர் தான் தாமஸ் ஆண்டர்சன் எனவும், லண்டன் ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தார்.
அதை நம்பி ஓங்கநாதன் அவருடன் பழகியுள்ளார். வேலையில்லாததால் உதவும்படியும் கூறியுள்ளார். அதற்கு மருத்துவர், விரைவில் இந்தியா வரவுள்ளதாகவும், அதற்குரிய விசா நகலை அனுப்பியதுடன் வாங்கிய பரிசுப்பொருட்களை அனுப்ப வீட்டு முகவரியை அனுப்பவும் கேட்டார்.
பின் ஏப்ரல் 21ஆம் திகதி வேறு ஒரு செல்போன் நம்பரில் இருந்து ஓங்கநாதனிடம் பேசிய பெண் டில்லி கஸ்டம்ஸ் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி, லண்டனிலிருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதை பெற சேவை கட்டணமாக ரூ.18,500 செலுத்தவும் கூறியுள்ளார்.
அப்பெண் அனுப்பிய வங்கி கணக்கில் ஓங்கநாதன் பணம் செலுத்தியுள்ளார். மீண்டும் அதே செல்போன் நம்பரில் இருந்து விலை உயர்ந்த பரிசுபொருளாக உள்ளதால் கூடுதல் கட்டணம் செலுத்த கூறியதால் ஓங்கநாதன் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் வரை செலுத்தினார்.
தொடர்ந்து கூடுதலாக பணம் கேட்கவும் சந்தேகமுற்று விசாரித்த போது ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் பொலிசில் ஓங்கநாதன் புகார் அளித்துள்ளார்.
புகாரையடுத்து பொலிசார் மோசடி நபர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.