லண்டனில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்... பொலிஸ் குவிப்பால் பரபரப்பு
லண்டனில், வீட்டு முன் தோட்டத்தில் காணப்பட்ட 6 வயதேயான இரட்டையர்கள் மாயமான அதிர்ச்சி சம்பவத்தில் பொலிசார் தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
லாம்பெத் பகுதியில் கவுலி சாலையில் அமைந்துள்ள குடியிருப்பின் முன்பக்க தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர் 6 வயது இரட்டையர்களான இமானுவல் மற்றும் இமானுவெல்லா.
இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் சிறுவர்கள் இருவரும் மாயமானதாக தெரியவந்துள்ளது. உறவினர்கள் சென்று பார்த்தபோது சிறார்கள் இருவரும் மாயமாகியுள்ளதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக ஸ்கொட்லாந்து யார்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறார்கள் இருவரின் புகைப்படங்களை வெளியிட்ட விசாரணை அதிகாரிகள், பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதுடன், தகவல் தெரியவரும் எவரும் 999 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஹெலிகொப்டர் சேவையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொலிசாருடன், குடும்ப உறுப்பினர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் உறவினர்கள் என ஒரு குழுவும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாயமான சிறார்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் இருப்பதாகவும், சிறார்களின் நலனில் அதிகாரிகள் அக்கறை கொண்டிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.