"குழந்தைக்கு உடம்பு சரியில்லை, நான் போகணும்" லண்டனில் போராட்டக்கார்களிடம் கெஞ்சிய தந்தை: வெளியான பரிதாப காட்சி
லண்டனில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலர்களிடம், NHS ஊழியர் ஒருவர் வீட்டிலிருக்கும் தனது நோய்வாய்ப்பட்ட குழந்தையைப் பார்க்க செல்லவேண்டும் என கூறி, சாலை மறியலை கைவிடுமாறு கெஞ்சும் சோகமான வீடியோ ஒன்று காண்போரை நெகிழவைத்துள்ளது.
அக்டோபர் 8-ஆம் திகதி காலை M25-ன் சந்திப்பு-25ல் காலநிலை மாற்றத்திற்கு எதிரான (Insulate Britain) சமூக ஆர்வலர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் சாலை மறியல்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தடை உத்தரவை மீறியதை ஒப்புக்கொண்ட அந்த ஒன்பது எதிர்ப்பாளர்களுக்கு கடந்த புதன்கிழமை லண்டன் உயர்நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அந்த ஒன்பது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து இந்த வார இறுதியில் (சனிக்கிழமை) நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் வோக்ஸ்ஹால் பாலம் மற்றும் லம்பேத் பாலத்தை முற்றுகையிட்டனர்.
Vauxhall Bridge in central London- Photo: PA
அப்போது, சுமார் 5 மணி நேரங்களுக்கு மேலாக சாலை மறியல் நடைபெற்ற நிலையில், ஒரு NHS ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினார்.
“என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. நான் என் குழந்தையை பார்க்க வீட்டிற்குச் செல்ல வேண்டும்… இது உண்மையில் தவறு. நீங்கள் மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். எனக்கும் உடம்பு சரியில்லை. நான் எப்படி வீட்டுக்குப் போவேன்?" என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெண் ஆர்வலரிடம் அந்த நபர் கெஞ்சியபடி கேட்டுக்கொண்டார்.
நோய்வாய்ப்பட்ட தனது குழந்தையை பார்க்க வீட்டுக்கு செல்லவேண்டுமென போராடும் ஒரு தந்தையின் பரிதாபமான வீடியோ பிரித்தானியாவின் பல முன்னணி ஊடகங்களில் வெளியானது.
இருப்பினும், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் சில நேரம் கழித்து சுமார் 30 ஆர்பாட்டக்கார்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்வதைத் தடுக்க லண்டன் உயர்நீதிமன்றம் இதுவரை 5 தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு வழங்கப்பட்ட நான்கு தடை உத்தரவுகள், M25, போர்ட் ஆஃப் டோவர் மற்றும் லண்டனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் மற்றும் லண்டனுக்கான டிரான்ஸ்போர்ட் (TfL) ஆகியவற்றில் ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்தல் ஆகியவை அடங்கும்.
Vauxhall Bridge in central London- Photo: PA
தலைநகரின் பரபரப்பான சில சாலைகளில் போராட்டக்காரர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் TfL க்கு சிவில் தடை உத்தரவு வழங்கப்பட்டது.
தடை உத்தரவை மீறுபவர்கள் நீதிமன்ற அவமதிப்பாகக் கண்டறியப்பட்டு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது வரம்பற்ற அபராதம் விதிக்கப்படலாம்.