இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி
லண்டனில் ப்ரெண்ட் பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், அவருக்கான தண்டனை எதிர்வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
குடும்பத்தார் நம்பிக்கையை பெற்ற பிறகு
ப்ரெண்ட் பகுதியில் குடியிருக்கும் 61 வயது சுப்ரமணியம் சதானந்தன் என்பவரே சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி தண்டனையை எதிர்கொள்கிறார். இரு சிறார்களிடம், அவர்களின் குடும்பத்தார் நம்பிக்கையை பெற்ற பின்னர், அவர்களின் குடியிருப்புகளில் வைத்தே சதானந்தன் அத்துமீறியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
Image: Metropolitan Police
மேலும், தொடர்புடைய வீடுகளில் சதானந்தன் இரவு விருந்து உபசாரங்களுக்கு என தொடர்ந்து செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவம் நடக்கும் போது 12 வயதேயான அந்த சிறுமியிடம், தமக்கு தொழில் ரீதியான தரவுகளை தயார் செய்ய உதவும்படி கேட்ட சதானந்தன், அவருடன் தனியாக கணினி இருக்கும் அறைக்கு சென்று, அந்த வாய்ப்பை துஸ்பிரயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, இந்த சம்பவம் நமக்குள் ரகசியமாக இருக்கட்டும் எனவும், வேறு எவரும் தெரிந்துகொள்ள வேண்டாம் எனவும் அந்த சிறுமியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சதானந்தன் அந்த சிறுமியை தொடர்ந்து பல நாட்கள் துன்புறுத்தியும் வந்துள்ளார். மட்டுமின்றி, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி குறித்த சிறுமியை தமது தேவைக்கு பயன்படுத்தியுள்ளார் என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னர், குறித்த சிறுமி, கல்வி நிமித்தம் பல்கலைக்கழகம் சென்ற பின்னர், தமக்கு நேர்ந்த துயரத்தை முதன்முறையாக குடும்பத்தினரிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இன்னொருவர்
இந்த நிலையில், சதானந்தனால் பாதிக்கப்பட்ட இன்னொருவரும் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சம்பவம் நடக்கும் போது அந்த நபருக்கு 9ல் இருந்து 13 வயதிருக்கும் எனவும், குடியிருப்பில் எவரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே சதானந்தன் தம்மிடம் அத்துமீறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Image: Metropolitan Police
இந்த இரண்டு விவகாரங்களும் பொலிசாருக்கு புகாராக தெரிவிக்கப்பட்ட நிலையில், 2019 மே 10ம் திகதி சதானந்தன் கைது செய்யப்பட்டார். ஆனால் அப்படியான தவறுகள் தமது பக்கத்தில் இருந்து நடக்கவில்லை என சதானந்தன் மறுத்துள்ளார்.
இருப்பினும் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, அவர் மீதான 10 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. சதானந்தன் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரி தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்ட இருவரும் துணிவுடன் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுதலுக்கு உரியது. விசாரணை காலம் முழுவதும் அவர்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படுவதை நானும் எனது குழுவினரும் உறுதி செய்துள்ளோம். அப்படியே, அவர்களுக்கு நீதி கிடைக்கவும் எங்கள் உழைப்பு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.