லண்டனில் உயிரிழந்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு அஞ்சலி! மனதை உருக்கும் புகைப்படம்
லண்டனில் உள்ள குடியிருப்பில் இலங்கை தமிழ் குடும்பத்தார் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி எழுதப்பட்ட வாசகம் அடங்கிய புகைப்படமும் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்ட கரடி பொம்மையின் புகைப்படமும் வெளியாகி மனதை கலங்கடித்துள்ளது.
தென்கிழக்கு லண்டனின் Bexleyheathல் உள்ள குடியிருப்பு ஒன்றில், கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தினர் நால்வர் உயிரிழந்தனர்.
இளம்பெண் நிரூபா, அவரின் குழந்தைகளான மகள் ஷாஷ்னா மற்றும் மகன் தபீஷ் மற்றும் குழந்தைகளின் பாட்டி ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.
தீவிபத்து நடந்த வீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இந்த குடும்பத்தார் குடி வந்துள்ளனர், இந்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என கூறும் பொலிசார், விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக இருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை என கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த வீட்டின் அருகே அப்பகுதி பகுதி மக்கள் பலரும் உயிரிழந்த நால்வருக்கும் அஞ்சலி செலுத்தி மலர்வளையம் வைத்தனர்.
அதில் ஒரு கண்ணீர் அஞ்சலி வாசகத்தில், இந்த விலைமதிப்பற்ற உயிரை இழந்ததற்காக என் இதயம் வலிக்கிறது என எழுதப்பட்டுள்ளது. அதே போல உயிரிழந்த இரண்டு குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கரடி பொம்மை ஒன்று சம்பவ இடத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.