ஸ்பெயினை அடுத்து... ஈரான் தொடர்பில் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக திரும்பிய பிரான்ஸ்
ஈரானை தாக்குவதனூடாக டொனால்ட் ட்ரம்ப் மில்லியன் கணக்கான உயிர்களுடன் ரஷ்ய ரவுலத் விளையாடுவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடுமையாக சாடியுள்ளார்.
சட்டவிரோதமானது
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாத, ஆபத்தான இராணுவத் தலையீடு என்றும் சான்செஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போரை நிறுத்துக என்பதே ஸ்பெயின் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களில் தங்களின் இராணுவ தளங்களைப் பயன்படுத்த பிரதமர் சான்செஸ் அனுமதி மறுத்ததை அடுத்து, ஸ்பெயினுடனான அமெரிக்க வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார்.
அத்துடன் எந்த நாட்டின் இராணுவ தளங்களையும் பயன்படுத்த எங்களுக்கு எவரும் மறுப்பு தெரிவிப்பதில்லை என்றும், ஆனால் நாங்கள் அவ்வாறு அத்துமீறுவதில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, ஸ்பெயினுக்கு எதிராக பொருளாதார அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட நிலையில், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை சட்டவிரோதமானது என்று அறிவித்து, பிரான்ஸ் நிர்வாகமும் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை தொலைக்காட்சியில் உரையாற்றிய இமானுவல் மேக்ரான், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவித்தார்.
மட்டுமின்றி, நாட்டின் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் கடற்படையை மத்தியதரைக் கடலுக்கு அனுப்பவும், சைப்ரஸுக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பவும் உத்தரவிட்டதாகக் கூறினார்.

போர்நிறுத்தத்திற்கு அழுத்தம்
இந்தப் பிராந்தியத்தில் இராணுவ ஆதரவை அதிகரிக்க இது உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஃபேல் போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வான்வழி ரேடார் அமைப்புகள் மத்திய கிழக்கு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமது அனைத்து நடவடிக்கைகளும் கண்டிப்பாக தற்காப்பு செயல்பாடு என்றும், கூட்டாளிகளைப் பாதுகாத்து அமைதியை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்டவை என்றும் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகியவற்றுடன் சேர்ந்து போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், பிராந்தியத்தில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்றார். மட்டுமின்றி, அமெரிக்கா சில தளங்களை அணுக அனுமதிப்பதன் மூலம் ஜேர்மனி உதவியதற்காக ட்ரம்ப் பாராட்டினார்.
இதனையடுத்து ஜேர்மனியில் தனது அரசாங்கமும் ட்ரம்பும் இணைந்து ஈரானின் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்தைப் பகிர்ந்து கொண்டதாக மெர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |