காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரனிய மூத்த மதகுருவின் அழைப்பு
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அலி காமெனியின் இரத்தத்திற்கு முஸ்லிம்கள் பழிவாங்க வேண்டும் என்று ஈரானிய மூத்த மதகுரு ஒருவர் ஃபத்வா வெளியிட்டுள்ளார்.
இரத்தத்திற்கு பழிவாங்க
ஈரானின் உயர் தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, ஈரானிய மதத் தலைவர் நாசர் மகரெம் ஷிராசி ஃபத்வா ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலகில் அனைத்து முஸ்லிம்களும் காமெனியின் இரத்தத்திற்கு பழிவாங்கக் கடமைப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

காமெனியின் படுகொலைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் முதன்மையான குற்றவாளிகள் என ஷிராசி கூறியுள்ளார். ஃபத்வா என்பது மத அதிகாரிகள் அல்லது அறிஞர்களால் பிறப்பிக்கப்படும் ஒரு இஸ்லாமிய தீர்ப்பாகும், அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதை அனுசரிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
ஈரானில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த தீவிர பிரகடனத்தால், தூதரகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஈரானிய ஸ்லீப்பர் செல்கள் மற்றும் தனி நபர்கள் பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதை உலகம் காண அதிக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஈரானுக்கு முதன்மையான பங்குண்டு என குறிப்பிடும் பயங்கரவாத தடுப்பு நிபுணர் கஃபார் ஹுசைன், பிரித்தானியாவிலும் அதிருப்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஈரான் குறிவைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிரான போர் வெடித்ததிலிருந்து அதிகரித்து வரும் ஒரு உண்மையான அச்சுறுத்தல் இதுவாகும் என குறிப்பிட்டுள்ள அவர், பாதுகாப்பு சேவைகள் விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவென்றார்.
கடந்த 2018ல், 100,000 ஈரானியர்களும் நூற்றுக்கணக்கான சர்வதேச பிரமுகர்களும் கலந்து கொண்ட ஈரானிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான பாரிஸ் பேரணியில் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை பிரான்ஸ் முறியடித்தது.
அதே ஆண்டு, ஈரானிய உளவு அமைப்புகள் டென்மார்க் மண்ணில் ஒரு ஈரானிய எதிர்க்கட்சித் தலைவரைக் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டியது.

2012ல், டெல்லியில் ஒரு இஸ்ரேலிய தூதரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு ஈரானிய உளவு அமைப்புகள் தான் காரணம் என்று இந்திய காவல்துறை முடிவு செய்தது, இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், பிரித்தானிய உளவுத்துறை அமைப்புகள் ஈரானிய ஸ்லீப்பர் செல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
குறைமதிப்பிட வேண்டாம்
இதனிடையே, ஈரானிய புரட்சிகர காவல்படை ஐரோப்பாவில் செயல்படும் ஒரு ரகசியக் குழுவை பராமரிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், முதன்மையாக ஈரானிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தூதரகங்கள், துணை தூதரகங்கள் மற்றும் மசூதிகளைக் கொண்டுள்ளது என ஜேர்மனியின் முன்னணி பயங்கரவாத நிபுணரான ஹெய்ன்கோ ஹெய்னிஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், யூதர்கள் அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்கள், உணவகங்கள் அல்லது அங்காடிகள் போன்றவை அவர்களின் இலக்குகளாக இருக்கலாம் என்றார்.

அத்துடன், ஷிராசி வெளியிட்டுள்ள ஃபத்வாவை குறைமதிப்பிட வேண்டாம் என்றும் ஹெய்ன்கோ ஹெய்னிஷ் எச்சரித்துள்ளார். ஷிராசி நன்கு அறியப்படும் மரியாதைக்குரிய சட்ட அறிஞர் என குறிப்பிட்டுள்ள ஹெய்ன்கோ ஹெய்னிஷ்,
1979 இல் ஈரானிய புரட்சியை நிறுவுவதற்காக நிபுணர்கள் சபையில் நியமிக்கப்பட்டவர் என்றும், ஈரானின் முதல் அரசியலமைப்பை உருவாக்குவதில் பங்கு வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |