இந்தியாவிலும் சமூக ஊடகம் பயன்படுத்த வயது கட்டுப்பாடு? மேக்ரான் வலியுறுத்தல்
இந்தியாவிலும் சமூகஊடகம் பயன்படுத்த வயது கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகம் பயன்படுத்த வயது கட்டுப்பாடு
சிறுவர்கள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் அவர்களின் மனநலன் மற்றும் திறன்களில் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வயது கட்டுப்பாடு கொண்டு வரும் திட்டத்தில் இறங்கியுள்ளன.
முதல் நாடாக அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் தடை விதித்துள்ளது.
தற்போது பிரித்தானியாவும் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும், விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் சமூக ஊடகம் பயன்படுத்த கட்டுப்பாடு?
இந்நிலையில், டெல்லி AI உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்தியாவும், சமூகவலைத்தளங்களை பயன்படுத்த வயது கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதில் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 1.4 பில்லியன் மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியாது என்று உலகம் இந்தியாவிடம் கூறியது. அவர்கள் கூறியது தவறு என்று இந்தியா நிரூபித்தது.
இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பாதுகாப்பான இடமாக மாற்ற சமூகவலைதளங்கள், அரசாங்கங்கள் மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இதனால்தான், பிரான்சில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூகவலைதளங்ககளைத் தடை செய்யும் செயல்முறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.குழந்தைகளை பாதுகாப்பது ஒழுங்குமுறை அல்ல நாகரீகம்.
திரு.பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த குழுவில் சேருவீர்கள் என்பது எனக்குத் தெரியும். மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா அத்தகைய அணுகுமுறையில் சேரும் என்பது ஒரு சிறந்த செய்தி" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் சமூகவலைத்தளங்களுக்கு வயது கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இது தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |