239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... துல்லியமாக திட்டமிட்டே விமானத்தை கடலில் விழச் செய்தாரா விமானி?
மலேசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 விமானம், 239 பேருடன் மாயமான நிலையில், அந்த விமானத்தின் விமானி திட்டமிட்டே விமானத்தை கடலில் விழச் செய்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த போயிங் 777 ரக விமானம், 2014ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 8ஆம் திகதி திடீரென மாயமான நிலையில், இன்று வரை அந்த விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.
விமானத்தின் விமானி அதை கடத்தியிருக்கலாம் என்றும், துணை விமானி கடத்தியிருக்கலாம் என்றும், ரஷ்யா அதை திருடி மறைத்துவிட்டதாகவும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றனவேயொழிய, இன்னமும் அந்த விமானத்துக்கு என்ன ஆயிற்று என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையில், விமானவியல் பொறியாளரான Richard Godfrey என்பவர் புதிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதன்படி, மன அழுத்தப் பிரச்சினை உடையவர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள, அந்த விமானத்தின் விமானியான Zaharie Ahmad Shah, திட்டமிட்டே விமானத்தை கடலில் விழச்செய்ததாக தெரிவிக்கிறார் Godfrey.
Weak Signal Propagation (WSPR) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அந்த விமானத்தின் பாதை குறித்து ஆராய்ந்த Godfrey, விமானத்தின் பயணத்தைக் கவனிக்கும்போது, கடைசியாக அது பல இடங்களில் பல முறை திரும்பியதை சுட்டிக்காட்டி, ஆக, விமானி சுயநினைவுடன்தான் இருந்துள்ளார் என்றும், வர்த்தக விமானங்கள் வரும் நேரத்தை நன்கு கவனித்து, அவற்றின் மீது மோதிவிடாமல் இருக்கும் வகையில் தனது பயணப்பாதையை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
ஒருவேளை ராடார் எதிலாவது சிக்கினால் கூட, விமானம் எங்கு செல்கிறது என கணிக்க முடியாத வகையில் தனது பாதையை அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் Godfrey.
ஆக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த Zaharie, வேண்டுமென்றே திட்டமிட்டே விமானத்தை கடலில் விழச் செய்ததாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் Godfrey.
ஏற்கனவே தனது மனைவியை பிரிந்ததாலும், விமானம் ஏறுவதற்கு சற்று முன், தனது உறவினர் ஒருவர் சிறையிலடைக்கப்பட்டதாலும், ஏற்கனவே மன அழுத்த பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படும் Zaharie, வேண்டுமென்றே விமானத்தை 239 பேருடன் கடலில் விழச் செய்திருக்கலாம் என்ற கருத்து தற்போது மேலோங்கியுள்ளது.