பேரு தான் ஆல்ரவுண்டர்... ஆனா ஏன் ஹர்திக் பாண்டியா பவுலிங் போடவே மாட்டேங்குறார்? ரகசியம் உடைத்த மஹேலா ஜெயவர்தனே
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் உள்ளது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கமளித்துள்ளார்.
மும்பை அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வருகிறார். குறிப்பாக 2019ஆம் ஆண்டு அவருக்கு முதுகுப்பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு இதுவரை சுமார் 41 போட்டிகளில் 46 ஓவர்களை மட்டுமே அவர் வீசியுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரிலும் பாண்டியா இதுவரை பந்து வீசாமல் இருந்து வருகிறார். அடுத்து வரும் டி20 உலக கோப்பையில் அவர் ஆல்-ரவுண்டராக விளையாட இருப்பதால் நிச்சயம் பந்து வீச வேண்டிய அவசியம் இருக்கும்.
ஆல்ரவுண்டரான அவர் பந்துவீசாமல் உள்ளது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அவர் இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலுமே பந்துவீச மாட்டார். ஏனெனில் தற்போது அவர் பந்துவீசும் அளவிற்கு முழு உடற்திறனுடன் இல்லை.
அவரை பந்துவீச அழுத்தம் கொடுத்தால் அவருடைய பேட்டிங் திறன் பாதிக்கும். அது மட்டுமின்றி அவருக்கு சில பிரச்சனைகளும் வந்து விட வாய்ப்புள்ளது.
எனவே அவரை பந்து வீசாமல் வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் அடுத்து உலக கோப்பை வர இருப்பதால் அவராக தயாராகும் வரை அவரை நாங்கள் பந்துவீச கட்டாயப்படுத்த மாட்டோம் என கூறியுள்ளார்.