87 ஆண்டு கால வரலாற்றில்... முக்கிய விளையாட்டுத் தொடர் முதல்முறையாக ரத்து
கொரோனா பரவல் காரணமாக முதல்முறையாக இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ரஞ்சி கிண்ணம் கிரிக்கெட் போட்டி 1934-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த சீசனில் அரங்கேறிய ரஞ்சி போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன.
இதில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக உச்சிமுகர்ந்தது. உள்நாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த உதவும் இந்த முதல்தர கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) முதல்முறையாக இந்த சீசனில் (2020-21) நடத்துவதில் சிக்கல் உருவானது.
கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் ஒவ்வொரு மாநில அணி வீரர்களையும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து முழுமையான பாதுகாப்புடன் நீண்ட நாட்கள் இந்த போட்டியை நடத்துவது என்பது சிரமமான காரியம்.
இது குறித்து ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் யோசனை கேட்டது.
இதில் பெரும்பாலான மாநில சங்க உறுப்பினர்கள் இந்த சீசனில் ரஞ்சி போட்டி வேண்டாம் என்று கருத்து தெரிவித்தனர்.
அவர்களின் யோசனையை ஏற்று 87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த சீசனில் ரஞ்சி போட்டி நடத்தப்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.