இனி ஒரு பெண்ணுக்கு கூட பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காது: 2012ஆம் ஆண்டு தாலிபான்களால் சுடப்பட்ட நோபல் பரிசு வென்ற மலாலா
இனி ஒருபோதும் ஆப்கன் பெண்கள் பள்ளிக்குச் செல்லவோ, புத்தகங்களை தொடவோ வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று தான் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார் 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா யூசஃப்சை.
பெண் பிள்ளைகள் கல்வி கற்கவேண்டும் என்று குரல் கொடுத்ததற்காக 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து தாலிபான்களால் சுடப்பட்டார் மலாலா (24). தாலிபான்கள் அவரைக் கொல்ல முயன்றாலும் அவர் முகத்தில் காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இன்றும் அவரது முகத்தில் அந்த தழும்புகளைக் காண முடியும்.
அவர் சுடப்பட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு உருவானது. பின்னர் 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவிற்கு வழங்கப்பட்டது.
தாலிபான்களின் கொடூர முகத்தை நேரடியாக சந்தித்தவரான மலாலா, இப்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கன் பெண்களின் கல்வியின் எதிர்காலம் குறித்து தான் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு மலாலா வாழ்ந்த பாகிஸ்தானுக்குள் நுழைந்த தாலிபான்கள், பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்கு தடை விதித்ததை அவர் நினைவுகூருகிறார். அன்று நான், இனி அவர்கள் என்னை வகுப்பறையைக் காணவோ, புத்தகங்களைத் தொடவோ விடமாட்டார்கள் என்ற எண்ணத்தால் எப்படி ஒரு நம்பிக்கையற்ற நிலைமையில் இருந்தேனோ, அதே நிலைக்கு இன்று மீண்டும் ஆப்கன் சிறுமிகளும், இளம்பெண்களும் ஆளாகியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் மலாலா.
தனக்கு 15 வயதே இருக்கும்போது, தாலிபான்களின் தடையை மீறி பேருந்தில் பள்ளிக்குச் செல்லும்போது தாலிபான்களால் சுடப்பட்டார் மலாலா. அந்த காலகட்டத்திலேயே அவர் பெண் உரிமைக்காக எழுத்து வாயிலாக குரல் கொடுத்து வந்தவர். ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அவரது பேட்டி வெளியானதைத் தொடர்ந்து அவரை அடையாளம் கண்டுகொண்ட தாலிபான்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றது குறிப்பிடத்தக்கது.
We watch in complete shock as Taliban takes control of Afghanistan. I am deeply worried about women, minorities and human rights advocates. Global, regional and local powers must call for an immediate ceasefire, provide urgent humanitarian aid and protect refugees and civilians.
— Malala (@Malala) August 15, 2021