ட்ரம்பின் நடவடிக்கையால் பிற நாடுகளுடன் வர்த்தக உறவு: கட்டியெழுப்புவோம் என அறிவித்த பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பிற்கு காத்திருக்காமல், பிற நாடுகளுடன் வர்த்தக உறவை கட்டியெழுப்ப தங்கள் நாடு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கூடுதல் 10 சதவிகித வரி
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீனப் பொருட்களுக்கும் கூடுதல் 10 சதவிகித வரி செலுத்தும் நடைமுறையை ட்ரம்ப் அமுல்படுத்தியுள்ளார்.
அதேபோல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக உறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வர்த்தக உறவை மேம்படுத்த
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் கூறுகையில், "கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிரான கடுமையான வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். வர்த்தக உறவை மேம்படுத்த, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு மலேசியா காத்திருந்தால் அது நாட்டுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
மேலும் அவர், "சீனா மீதான அமெரிக்க வரி விதிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், வரிவிதிப்பை எதிர்கொள்வதில் மலேசியா அவசரம் காட்டக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வர்த்தகப் பங்காளிகளுக்கான கட்டமைப்பை உருவாக்க தேவையான, ஊக்கமான செயல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |