ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல்... கொலை முயற்சி என குற்றச்சாட்டு: முக்கிய நாடுகள் கண்டனம்
மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமத் நஷீத் தனது வீட்டிற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளார்.
காயங்களுடன் தப்பிய மொஹமத் நஷீத் தற்போது முதன்மை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் அவரது குடும்ப வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
நஷீத் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றே கூறப்படுகிறது. நெருங்கிய நண்பரும் தற்போதைய ஜனாதிபதியுமான இப்ராஹிம் முகமது சோலிஹ், நஷீத் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியான நஷீதின் குடியிருப்பு அருகே முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலில் ஆழமான காயங்களுடன் அவர் உயிர் தப்பியதாகவே கூறப்படுகிறது.
நஷீதின் பாதுகாவலர்களில் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நஷீத் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித்,
இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஜனாதிபதி நஷீத் மற்றும் இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் எப்போதும் உள்ளன என தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது நஷீத் தமது காருக்குள் ஏற முயலவே, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது.
இதனையடுத்து, அதிகாரிகளால் நஷீத் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நஷீத் மீதான வெடிகுண்டு தாக்குதல் கொலை முயற்சியாக இருக்கலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.