Pegasus! உளவு பார்க்கப்பட்ட அரச குடும்பத்து உறுப்பினர்கள், முக்கிய பிரபலங்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்
இஸ்ரேலிய நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளால் அரச குடும்பத்து உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல் வெளியாகி உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறன்று வெளியான குறித்த அதிர்ச்சி தகவல் பரவலாக தனியுரிமை மற்றும் உரிமை மீறல்கள் குறித்த அச்சங்களைத் தூண்டியுள்ளது.
இஸ்ரேலின் தனியார் நிறுவனமான NSO உருவாக்கிய உளவு மென்பொருள் தான் இந்த பெகாசஸ். இந்த NSO நிறுவனமானது உலகின் எந்த தனியார் நிறுவனத்துடனும் இணைந்து செயல்படுவதில்லை, மாறாக அரசாங்கத்துடன் மட்டுமே பணியாற்றுவதை கொள்கையாக கொண்டுள்ளது.
இதனாலையே, தற்போது வெளியாக தகவல்கள் உலக நாடுகளில் அதி முக்கியத்துவம் பெறுகிறது. குறித்த நிறுவனமானது 2016 முதல் இதுவரை உலகம் முழுவதுமாக 50,000 முக்கிய நபர்களின் தொலைபேசிகளை உளவு பார்த்துள்ளது.
NSO நிறுவனம் உளவு பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் சவுதியில் பிறந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மனைவி Hanan Elatr என்பதும் தெரிய வந்துள்ளது.
கஷோகி கடந்த 2018ல் சவுதி சிறப்பு படையினரால் துருக்கியில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது உடல் கூட இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
மட்டுமின்றி உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் முக்கிய பத்திரிகையாளர்களின் மொபைல்போன்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளது.
மேலும், பல நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள், சவுதி அரேபிய அரசு குடும்பத்து உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள், முதன்மை அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளனர்.
முக்கியமாக இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் NSO நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வந்துள்ளது. அஜர்பைஜான், பஹ்ரைன், ஹங்கேரி, கஜகஸ்தான், மெக்ஸிகோ, மொராக்கோ, ருவாண்டா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.
இந்தியாவில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான கருத்தியலைக் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 40 முதன்மை பத்திரிகையாளர்கள், 3 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், 2 மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றும் பல தொழிலதிபர்களை NSO நிறுவனம் நரேந்திர மோடி அரசு சார்பில் உளவு பார்த்துள்ளது.