"என்னை ஜெயிலுக்கே அனுப்பிடுங்க ப்ளீஸ்" மனைவி தொல்லை தாங்காமல் பொலிஸிடம் கதறிய கணவன்! வேடிக்கை சம்பவம்
இத்தாலியில் வீட்டுச்சிறையில் இருக்கும் நபர் தனது மனைவியின் கொடுமையில் இருந்து தப்பிக்க காவல்துறையின் உதவியை நாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத 30 வயதான அந்த அல்பேனியா நாட்டைச் சேர்ந்த நபர், கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு இன்னும் சில ஆண்டுகள் வீட்டுச்சிறையை அனுபவிக்கவேண்டிய நிலையில், அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ரோமுக்கு சற்று வெளியே கைடோனியா மான்டெசெலியோவில் (Guidonia Montecelio) உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவர் தன்னால் வீட்தில் இருக்கும் பிரச்சினைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று நேராக காவல் நிலையத்துக்கே சென்றுள்ளார். அங்கு “என் இல்லற வாழ்க்கை நரகமாகிவிட்டது, இதற்கு மேலும் என்னால் தாங்க முடியாது, நான் சிறைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இனி தன் மனைவியுடன் கட்டாயமாக வாழ்வதை சமாளிக்க முடியாது என்று நினைத்த அவர், அதற்குப் பதிலாக சிறைக்கு செல்லலாம் என முடிவு செய்தார்.
இந்நிலையில், அவர் நினைத்ததைப் போலவே அவருக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. அவர் விருப்பப்பட்டத்தைப் போலவே அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அனால் அவர் கேட்டுக்கொண்டதற்காக விருப்பம் நிறைவேற்றப்படவில்லை.
அவர் வீட்டுச்சிறை விதிகளை மீறியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால், நீதிமன்ற விசாரணையில், போதைப்பொருள் குற்றவாளியை சிறைக்கு மாற்றுமாறு உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த விசித்திரமான சம்பவம் இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியது.