வைரஸை பரப்பிய நபருக்கு 18 மாத சிறை தண்டனை! எந்த நாட்டில் தெரியுமா?
கோவிட் விதிகளை மீறி மற்றவர்களுக்கு வைரஸ் பரப்பியதற்காக வியட்நாமில் ஒரு நபர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உலகில் கொரோனா வைரஸை கட்டுக்குக்குள் கொண்டு வந்து வெற்றி கண்ட நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும்.
வெகுஜன சோதனை, தொடர்பு தடமறிதல், இறுக்கமான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் என அனைத்தையும் வியட்நாம் அரசு தீவிரமாக செயல்படுத்தியது. ஆனால், சமீபத்திய வாரங்களில் புதிய தொற்றுநோய்கள் அந்த சாதனையை களங்கப்படுத்தியுள்ளன.
32 வயதான டாவோ துய் துங் (Dao Duy Tung) எனும் இளைஞருக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. அவர், "ஆபத்தான தொற்று நோய்களை பரப்பியதாக" குற்றம் சாட்டப்பட்டு ஹாய் டுவோங் (Hai Duong) மாகாண மக்கள் நீதிமன்றத்தில் ஒரு நாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடுமையான COVID-19 தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக, மற்றவர்களுக்கு வைரஸ் பரப்பியதற்காக மற்றும் அதிகாரிகளுக்கு நிதி சேதத்தை ஏற்படுத்தியதற்காக டாவோ துய் துங்கிற்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டாவோ துய் துங் கடந்த ஏப்ரல் 22-ஆம் திகதி லாவோல் (Laos) நாட்டிலிருந்து வியட்நாம் வந்துள்ளார். வந்ததும் அவர் அந்நாட்டு விதிமுறைகளின்படி சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார்.
லாவோஸ் நாட்டில் அவருடன் சமீபத்தில் நெருக்கமான தொடர்பில் இருந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதியான போதும், டாவோ இங்கு சோதனை செய்துகொள்ளவில்லை.
மேலும், வியட்நாமில் உள்ள அப்பள நகரங்களுக்குச் சென்று பலருக்கும் தொற்றை பரப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் பலரது தொடர்புகளின் தடத்தை தேடியதில் இவர் சிக்கினார். இவருக்கு தொற்று இருந்துள்ளது, இவர் மூலமாகவே பலருக்கு பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.