37 நாட்களில் 4 முறை திருமணம், 3 முறை விவாகரத்து செய்த நபர்! இதுவரை கேள்விப்படாத விசித்திர காரணம்
தைவானில் 37 நாட்களில் ஒரே பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து, மூன்று முறை நபர் ஒருவர் விவாகரத்து செய்த நிலையில் அதற்கான வினோத காரணம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான செய்தியை தைவானில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி வங்கியில் கிளார்க் ஆக பணிபுரியும் நபருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி திருமணம் நடந்தது.
இதையடுத்து ஏப்ரல் 7ல் இருந்து 16ஆம் திகதி வரை விடுமுறை எடுத்துள்ளார். பின்னர் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்த பின்னர் ஏப்ரல் 17ஆம் திகதி மீண்டும் அதே பெண்ணை இரண்டாம் முறையாக திருமணம் செய்திருக்கிறார்.
இந்த திருமணத்துக்கு 8 நாட்கள் விடுமுறை எடுத்த அவர் மீண்டும் ஏப்ரல் 28ஆம் திகதி மனைவியை பிரிந்தார்.
அடுத்த நாளான 29ஆம் திகதி அதே பெண்ணை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்ட அவர் மீண்டும் மே 11ஆம் திகதி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மே 12ஆம் திகதி அதே பெண்ணை நான்காம் முறையாக மணந்தார்.
இந்த வினோத செயல்களை எல்லாம் சம்பளத்துடன் விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்திருக்கிறார்.
ஆனால் வங்கிக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் முதலில் திருமணம் செய்து கொண்ட நாட்களுக்கான விடுமுறைக்கு உட்பட்ட சம்பளத்தை மட்டுமே நிர்வாகம் அவருக்கு கொடுத்தது.
இதையடுத்து அனைத்து திருமணத்துக்கான விடுமுறைக்கான சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என அவர் தொழிலாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்தார்.
இதை எதிர்த்து அவர் பணிபுரியும் வங்கியும் மேல் முறையீடு செய்தது. இது தொடர்பாக பேசிய தொழிலாளர் பணியகத்தின் ஆணையர், வங்கி ஊழியர் செய்த விடயம் நியாயமற்றது தான்.
ஆனால் ஒரு நபர் ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு விடுமுறைக்கு விண்ணப்பிப்பது தவறு என தொழிலாளர் சட்டத்தில் இல்லை என கூறியுள்ளார்.