பல்பொருள் அங்காடியில் புகுந்து கொலைவெறித் தாக்குதல்: சிதறி ஓடிய மக்கள்
நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் புகுந்து நபர் ஒருவர் தாக்கியதில் நால்வர் காயமடைந்துள்ளனர், அதில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
நியூசிலாந்தின் Dunedin பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியிலேயே குறித்த கண்மூடித்தனமான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பல்பொருள் அங்காடியின் வாடிக்கையாளர்களே துணிச்சலாக அந்த தாக்குதல்தாரியை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், தாக்குதலின் நோக்கம் தெளிவாக இல்லை, ஆனால் இது ஒரு உள்நாட்டு பயங்கரவாத நிகழ்வு என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறினார்.
நியூசிலாந்தை பொருத்தமட்டில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மிக அரிதானவை. ஆனால் 2019ல் உலக நாடுகளை உலுக்கிய கிறைஸ்டு சர்ச் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது.
இதில், இப்பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் மொத்தம் 50 பேர்களை அந்த ஆயுததாரி சுட்டுக்கொன்றான். அதன் பின்னர் நியூசிலாந்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மிக மிக அரிதாகவே கணப்பட்டு வருகிறது.
திங்களன்று காயமடைந்த நான்கு பேர் பல்பொருள் அங்காடி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனிடையே, தாக்குதல்தாரிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸ் காவலில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மீது இதுவரை குற்றம் சாட்டப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி காயமடைந்தவர்கள், தாக்குதாரி ஆகியவர்களின் பெயர்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.