இரவோடு இரவாக வெளியேறும் உக்ரேனிய மக்கள்: பேரழிவில் இருந்து தப்புவதாக கண்ணீர்
உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இரவோடு இரவாக வெளியேறியுள்ள தகவல் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதலை அடுத்து மரியுபோல் நகரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியிருந்த பல நூறு குடிமக்களே தற்போது இரவோடு இரவாக வாகனங்களில் வெளியேறியுள்ளனர்.
80 நாட்கள் கடந்த படையெடுப்பினால் பெரும்பாலான மரியுபோல் நகரம் தற்போது ரஷ்ய வசம் சிக்கியுள்ளது. மட்டுமின்றி, கடந்த 60 நாட்களாக மரியுபோல் நகரில் இருந்து மக்களை படிப்படியாக வெளியேற்றும் பணியில் உக்ரைன் தரப்பு கவனம் செலுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில், மரியுபோல் நகரில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Berdyansk நகருக்கு மக்களை பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Zaporizhzhia பகுதிக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் தரப்பு திட்டமிட்டுள்ளனர்.
குறித்த திட்டத்திற்காக சுமார் 500 முதல் 1,000 கார்கள் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஒற்றை வெளியேற்றம் இதுவெனவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய துருப்புகளிடம் இருந்து தப்பிய மக்கள், பேரழிவில் இருந்து தப்பியுள்ளதாக கண் கலங்கியுள்ளனர்.
தற்போதைய சூழலில் Azovstal இரும்பாலை மட்டுமே உக்ரைன் துருப்புகள் வசம் இருப்பதாகவும் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்யா வசம் சிக்கியுள்ளது இதனால் உறுதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.